|
புலிக்கொடி ஈழத்தமிழர்களின் கொடியா?
- வலங்கைமான்
புலிக்கொடியை ஈழத்தமிழர்களின் கொடியாகக் காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் புலம்பெயர் நாடுகளில் காட்டப்படுகிறது. காட்டுவது வேறுயாருமல்ல, புலிச்சார்புத் தமிழர்கள் தான். ஆனால் புலிக்கொடி ஈழத்தமிழர்களின் கொடியா என்ற கேள்வி மிக முக்கியமானது. தமிழர்களாகிய நாங்கள் அறிந்த வகையில் புலிக்கொடி என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்த சோழ மன்னர்களின் கொடி. அந்த தமிழ்நாட்டில் கூட தமிழர்களுக்கு என்று ஒரே தனியரசு இருந்தது கிடையாது. சேர, சோழ, பாண்டிய என மூன்று அரசுகள் இருந்துள்ளன. அவர்களுக்கு கீழே நூற்றுக்கணக்கான சிற்றரசுகள் இருந்துள்ளன. இவர்களுக்கு எல்லோரிடையேயும் இடையறாத யுத்தங்களும் நடந்து வந்துள்ளன. அந்த யுத்தங்களின் போது சில தென்னிந்திய மன்னர்கள் இலங்கையிலிருந்த சிங்கள மன்னர்களின் படையுதவியையும் நாடியுள்ளனர். அதுமாத்திரமல்லாமல் பல சிங்கள மன்னர்கள் தென்னிந்திய இளவரசிகளை திருமணமும் செய்துள்ளனர். பௌத்த விகாரைகளில் இன்றும் காணப்படும் பிள்ளையார், முருகன் ஆலயங்கள் அந்த இளவரசிகள் தொழுவதற்காகவே கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை சோழப் பேரரசு பற்றி இரண்டு வரலாற்று தடயங்களும், யதார்த்தங்களும் உண்டு. ஒன்று தென்கிழக்காசியாவில் கம்போடியா வரை படையெடுத்து ஆக்கிரமித்த சோழப் பேரரசு, இலங்கையிலும் பொலநறுவை வரை ஆக்கிரமிப்பு செய்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆட்சி செய்துள்ளது. அந்த கசப்பான காலத்தை சிங்கள இனம் தமிழர்களின் ஆக்கிரமிப்பாகவே மனதில் இன்று வரை பதிவு செய்து வைத்துள்ளது. அதன் காரணமாக இந்தியா மீது, குறிப்பாக தமிழகம் மீது சிங்கள மக்கள் ஒருபுறம் வெறுப்பும், மறுபுறம் அச்சமும் கொண்டே வாழ்கின்றனர். இன்னொரு அனுபவம் இலங்கைத் தமிழர்களுக்கு உண்டு. குறிப்பாக பெரும்பாலான வடபகுதித் தமிழர்கள் கேரள எல்லையிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வந்தே யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள். யாழ்ப்பாணத்தின் முதல் குடியேற்றம் சிங்கள மக்கள் குடியேறிய அதே காலத்தில் (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) இந்தியாவிலிருந்து வந்த மக்களால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதெனினும், இறுதிக் குடியேற்றம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் குடியேறியவர்களுடன் முற்றுப்பெற்றுவிட்டது. அதன் பின்னர் பஞ்சத்திலும் பிழைப்பதற்காகவும் தமிழகத்திலிருந்து களவாகத் தோணிகளில் வந்தவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. வல்வெட்டித்துறையில் குடியேறிய இறுதி இந்திய குடியேற்றவாசிகள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்து நொருங்கிய, சோழப் பேரரசன் இராஜ இராஜ சோழனின் கடற்படையிலிருந்து சிதுறுண்டு வந்தவர்கள். அதன் காரணமாக மிக அண்மைக்காலம் வரை, கடற் கொள்ளையும், கள்ளக் கடத்தலுமே இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்கு பிந்திய வரலாற்றில,; தமிழரசுக்கட்சி தம்மை சேர, சோழ, பாண்டியர்களின் வாரிசுகளாகக் காட்டும் பொருட்டு, மூவர்ணக் கொடியை தனது கொடியாக வைத்திருந்தது. அவர்களால் தமது வன்செயல் நடவடிக்கைகளுக்காக ஆரம்ப காலத்தில் கையாள்களாக அமர்த்தப்பட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரன், தனது மூதாதையர்கள் படைப்பணி புரிந்த சோழப் பேரரசின் புலிக்கொடியையே பின்னர் தனது கொடியாக வெளிப்படையாக பிரகடனம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல், ஆரம்ப காலத்தில் தனது இயக்க புனைபெயர்களில் ஒன்றாக, சோழ மன்னனின் பெயர்களில் ஒன்றான ‘கரிகாலன்’ என்பதையும் சூடிக்கொண்டார். தென்னிந்தியாவின் நவீன சோழ மன்னர்களான கருணாநிதி, வை.கோபாலசாமி, ராமதாஸ், பழ.நெடுமாறன் போன்றோர் பிரபாகரனை தமது வாரிசாகப் பார்ப்பதும், அவர் மூலம் தமது பழைய சோழப் பேரரசு கனவை நிலைநாட்ட முனைவதும் அதனால் தான். இதனால் தான் தமிழர்களின் எந்தவொரு உரிமைக் கோரிக்கையையும் சிங்கள மக்கள் சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை தோன்றியது. எந்த ஒரு அதிகாரப் பகிர்வும் பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் வேரூன்ற அதுவே காரணம். இன்று தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தப்படும் அத்தனை கிளர்ச்சிகளையும், சிங்கள மக்கள் அந்த சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். உண்மையில் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதாவது உதவி செய்ய விரும்பினால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மூக்கை நுழைப்பதை நிறுத்தினாலே போதும். அத்துடன் புலிகள் பிரிவனைவாதத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் கைவிடுவதுடன், சோழப் பேரரசனின் புலிக் கொடியையும் கைவிட வேண்டும். அதுமட்டும் போதாது. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால், இலங்கையின் பூர்வீகத் தமிழர்களின் தலைமையும் ஏற்படுவது அவசியம். இந்த சூழ்நிலையில் தமிழர்களின் தேசியக்கொடி எது என்ற கேள்வி எழுவது இயல்பானது. முதலாவது விடயம், நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற வகையில் இலங்கையின் தேசியக் கொடியே எம் எல்லோரினதும் கொடியாகும். அந்த கொடியில் எமக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருப்பின், அதை திருத்தி அமைக்கும்படி நாம் வலியுறத்தலாமே தவிர அதை நிராகரிக்க முடியாது. அதே நேரத்தில் பல நாடுகளில் நடைமுறையில் இருப்பது போல, தமிழர்கள் தமக்கென்று தனித்துவமான, தனியான கொடியையும் வைத்திருக்க முடியும். இந்த உரிமை காரணமாகத்தான், 1981ல் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபை அமைந்த போது, தமிழர்களின் பாரம்பரியமான நந்திக் கொடியை அந்தச் சபை தனது உத்தியோகபூர்வ கொடியாக அறிவித்தது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக இலட்சினையிலும் இந்த நந்தி இடம் பெற்றது. எனவே தமிழினம் காலத்துக்கு ஏற்ப, தனது புதிய கொடி ஒன்றை உருவாக்கும் வரை, இந்த நந்திக் கொடி இருப்பதில் தவறேதும் இல்லை. கொடிய விலங்கான புலியின் கொடியை வைத்திருப்பதை விட, சாதுவான மிருகமாகவும், மக்களுக்கு நெருங்கிய உறவாகவும் இருக்கும் நந்தியின் கொடியை வைத்திருப்பதே சாலவும் பொருத்தமாகும். அதுவுமல்லாமல், இலங்கைத் தமிழினம் என்பது யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், கிழக்குத் தமிழர் என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியது. யாழ்ப்பாணத்தையும் வன்னியையும் தமிழ் மன்னர்கள் ஆண்ட வரலாறு உண்டு. ஆனால் அவர்கள் தனித்தனியான கொடியையே வைத்திருந்துள்ளனர். ஆனால் அது புலிக் கொடியல்ல. கிழக்குத் தமிழர்கள் பெரும்பாலும் கண்டி அரசுக்குக் கீழேயே இருந்து வந்துள்ளனர். அவர்களுடைய கொடியும் நிச்சயமாக புலிக் கொடியாக இருந்திருக்க முடியாது. இந்த மூன்று தமிழர்களும் இணைந்து இனிமேல் தான் ஜனநாயக முறையில் ஒரு கொடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் கொடி எமது பாரம்பரியத்தையும், கௌரவத்தையும், எதிர்கால லட்சியத்தையும் எடுத்தியம்பும் கொடியாக இருக்க வேண்டும். அதைவிட்டு புலிக் கொடி எந்த விதத்திலும் ஈழத்தமிழர்களின் கொடியாக ஒருபோதும் இருக்க முடியாது. அது எமது தாய்நாடான இலங்கையை ஆக்கிரமித்த சோழப் பேரரசின் கொடி மட்டுமின்றி, தமிழ் பாசிசவாதிகளின் கொடியாகவும் உலக மக்களால் இனம் காணப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில,; அந்தக் கொடியை ஈழத்தமிழர்கள் தமது கொடியாக வைத்திருப்பது மிகவும் அவமானகரமானதும், தவறான சமிக்ஞையை உலகிற்குக் கொடுப்பதாகவும் அமைந்து விடும்.
|