|
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எம். பிக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடமில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களுக்கு அக் கட்சியின் வேட்பாளர்களாகப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் எம். பி. தங்கேஸ்வரி கதிராமன் தெரிவித்தார்.
தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட த. தே. கூ. பட்டியலில் இடமளித்திருப்பதாக முன்னாள் எம். பியான இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் தேசியத்திற்காகப் பேசிய எமக்கு த. தே. கூ. வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திகளுக்குத் தம்மால் பங்களிப்பு செய்ய முடியாமல் போனது. இதனையிட்டு பெரிதும் கவலை அடைகிறேன் எனவும் அவர் கூறினார்.
“மக்களோடு, மக்களாக வாழும் எமக்கு த. தே. கூ. அபேட்சகர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. ஆனால் பிரதேசத்தில் மக்கள் ஆதரவற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு எடுத்தது. இம் முடிவை கட்சிக் கூட்டத்தில் நாம் எதிர்த்தோம். அம் முடிவுக்கு ஆதரவாக நாம் செயற்படவுமில்லை. இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடமளிக்கப்படவில்லை என அறிகின்றேன்.
இருந்த போதிலும் மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள். எமது மக்களுக்கு நிறையத் தேவைகள் உள்ளன.
அவற்றை நிறைவேற்றி வைப்பது எமது பொறுப்பு. அதனால் மக்களின் விருப்பத்தோடு இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன் என்றார்.
த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வரியும் வன்னி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.
தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமிட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
|