|
தொண்டர் நிறுவனங்களூடாக பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைக்க சில நாடுகள் முயற்சி வருகை தந்த இரு தூதுவர்களிடம் கொழும்பு புகார்
நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்காக சர்வதேச உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களூடாக சில நாடுகள் நிதி வழங்குவதாக வருகை தந்திருக்கும் இரு தூதுவர்களிடம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு புகார் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் விசேட தூதுவர் ஜோன் மக்கார்தி மற்றும் சூடான் தூதுவர் கதிர் கரோன் அஹமட் ஆகியோருடனான தனித் தனியான சந்திப்புகளின்போது இந்தக் கவலையை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். அவர் எந்தவொரு நாட்டினதும் பெயரைச் சுட்டிக் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆயினும், பெப்ரவரி 10 இல் சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அளித்த பேட்டியின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையுமென ஊகிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் சதிப்புரட்சித் திட்டக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஸ்ரெய்ட் ரைம்ஸுக்கு அளித்த பேட்டியில் கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
நலன் சார்ந்த ஆர்வத்துடன் மேற்கு நாடுகள் அவருக்கு ஆதரவளிக்கின்றன என்பதில் 100 சதவீதம் எமக்கு நம்பிக்கையுண்டு.அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் கூட அவரின் பிரசாரத்திற்காக அதிக பணத்தைச் செலவிட்டன என்று அவர் கூறியிருந்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக எழுதுவதற்காக பத்திரிகையாளர்களுக்கு நோர்வே அரசாங்கம் கொடுப்பனவுகளைச் செலுத்தி வருவதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களுக்கு நலன்சார்ந்த ஆர்வம் உள்ளது. தமிழ்ப் புலிகளுக்குப் பல்வேறு வழிகளில் ஆதரவளித்துள்ளனர். ஜனாதிபதியை வெளியேற்றும் முயற்சிக்காக பொன்சேகாவுக்கு அவர்கள் ஆதரவளித்தனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இக்குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள அமெரிக்கா,நோர்வே தூதரகங்கள் மறுத்திருந்தன. அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ் அமைச்சர் போகொல்லாகமவைச் சந்தித்தபோது இந்த விடயம் குறித்துப் பேசப்பட்டதாக வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைப் புறந்தள்ளுவதை நோக்கமாகக் கொண்ட முன்நகர்வுகளில் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும்.
எளிதில் புலப்படும் தவறான தகவல் தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையையும் கொழும்பு கொடுத்திருக்கவில்லை என்று அமெரிக்கத் தூதுவரிடம் போகொல்லாகம கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகத் தூதுவர்களுக்கு அமைச்சர் விபரித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம் அவர் அரசியலில் பிரவேசிப்பதற்கான தடைகளை ஜனாதிபதி அகற்றியதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
|