|
வடக்கில் த.தே. கூ வேட்பு மனுத்தாக்கல்: மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்
- B.B.C News
இலங்கையின் வடக்கே வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்திருக்கின்றது.
அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.
அதேவேளை, வன்னி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரட்ணம் ஆகியோருக்கு இம்முறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை; இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு- அம்பாறை வேட்பு மனுத்தாக்கல்கள்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனக்களை இலங்கை தமிழரசுக் கட்சி( தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இன்று தாக்கல் செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி தாக்கல் செய்துள்ள வேட்பாளர் பட்டியலில் 1994 மதல் 2002 வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா தலைமை வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அக் கட்சி சார்பில் அங்கம் வகித்திருந்த 4 பேரில் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, ரி.கனகசபை ஆகியோர் இத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கோரவில்லை என கூறப்படும் நிலையில், வேட்பு மனு கோரி விண்ணப்பித்திருந்த ஏனைய இருவரில் பா.அரியநேத்திரனுக்கு மாத்திரமே அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இடமளிக்கப்படாத மற்றுமொருவரான தங்கேஸ்வரி கதிர்காமர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணைந்து போட்டியிடுகிறார்.
1988 இல் ஈரோஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செளந்தராஜானுக்கும் அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை இது வரை இரண்டு அரசியல் கட்சிகளும் மூன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம்பெற்றுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு விஜயராஜா சத்தியசீலன் தலைமையில் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இம் மாவட்டத்தில் இதுவரை 5 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
|