|
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விடயங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இல்லை
வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உட்பட பல விடயங்கள் அடங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கான எந்தவொரு முன்மொழிவுகளும் கிடையாதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவிக்கிறது.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள விடயங்கள் கவலை தருவதாக அமைந்திருக்கிறது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உட்பட பல விடயங்கள் தேசிய ஒற்றுமையை எந்த விதத்திலும் பலப்படுத்துவதாக இல்லை.
இரு மாதங்களுக்கு முன்னதாக "அன்னம்%27 சின்னக் கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வி.பி.,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 3 பிரதான கட்சிகளே இருந்தன. இதற்கமைய இவர்களுக்கிடையே இரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் அதில் வடக்கு,கிழக்கு மீளிணைப்பு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் நாம் அப்போது குற்றஞ்சாட்டினோம். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது குற்றச்சாட்டை நிராகரிக்காத அதேநேரம், ஐ.தே.க., ஜே.வி.பி. இரு கட்சிகளும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கின்றன.
அந்த வகையில் நாம் இரு மாதங்களுக்கு முன்னர் கூறியதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது தனது தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டுள்ளது. ஆனால், இன்று ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. இரு கட்சிகளும் இதுபற்றி எதுவும் பேசாது மௌனம் சாதிக்கின்றன.
எனவே, இரு மாதங்களுக்கு முன்னர் நாம் இரகசிய ஒப்பந்தம் இருப்பதாகக் கூறினோம். அதன் அடிப்படை நோக்கம் இதுவே. இது தாய்நாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பாகும்%27 என்றார்.
இதேநேரம், அமைச்சர் அழகப்பெரும இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;
"25 ஆம்,26 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. எனவே, 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக வந்த தேர்தல்களில் நம்பிக்கையான ஆதரவை வழங்கியது போல இந்தத் தேர்தலிலும் ஆதரவை நல்குமாறு அரசதுறை ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அரச சேவைகளைக் குறைக்கச் செயற்பட்டவர்கள் இன்று அரச துறை ஊழியர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
பாதுகாப்புப் படையினரும் பொலிஸாருமே அதிகம் தபால்மூல வாக்களிப்புச் செய்கின்றனர். பாதுகாப்புப் படையினரையும் பொலிஸாரையும் காட்டிக் கொடுக்கச் செயற்பட்ட சில அரசியல் தலைவர்கள் இன்று அவர்களது காவலர்கள் போல் காட்டிக்கொள்ளப் பார்க்கிறார்கள். இதற்கு மக்கள் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தகுந்த பாடம் புகட்டுவார்கள்%27 என்று கூறினார்.
|