|
புலிகளை காப்பாற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு களத்தில் இறங்குகிறது.
- ருத்ரன்
இதுவரைகாலமும் புலிகள் சொல்வதை கேட்டு தலையாட்டி அதனையே ஒப்புவித்து வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு தற்போது புலிகளைக் காப்பாற்ற வேண்டிய பாரியப் பணியொன்றினுள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கில் மாகாணசபைத்தேர்தலை நிறுத்தச்சொல்லி இந்தியாவிடம் மன்றாடுவது. மற்றது புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த பேச்சுவார்த்தைக்கு புலிகள் தயார் என அறிவிப்புச் செய்வது. யுத்தம் பற்றி வீரவசனங்கள் பேசுகின்ற புலிகள் தமது இருப்பிற்கு ஆபத்து வரும் போதெல்லாம் தாங்களாகவே பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்புச் செய்வதில்லை. அவர்களுக்காக இதனைச் செய்வதற்கு முன்பு நோர்வே இருந்தது. தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருக்கிறது.
புலிகளுக்கு மிகவும் இக்கட்டான காலப்பகுதியிது. தற்பாதுகாப்பு யுத்தமொன்றிற்கு தள்ளப்பட்டுள்ள புலிகள் கிழக்கு மாகாணத்தைப் பறிகொடுத்துள்ள நிலையில் மன்னார் பிரதேசத்தினை இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் செல்வதற்காக மிகப்பெரிய யுத்தமொன்றிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசப்பகுதிகளை பறிகொடுப்பதன் மூலம் புலிகள் மிகவும் சிக்கலான வழிக்குள் தள்ளப்படுவார்கள் என்பதே இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகும். அதேசமயம் மன்னார் பிரதேசத்தை வெற்றி கொள்வதன் மூலம் அரசு தனது வாக்குவங்கிகளை அதிகரிக்கும் எண்ணமும் இருப்பதாகவே கருதப்படுகிறது.
புலிகள் பலமிழக்கும் போதெல்லாம் சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுவது வழக்கம். இந்த அழைப்புக்களின் பின்னால் தமது இழப்புக்களை ஈடுசெய்கின்ற புலிகளின் தந்திரோபாயங்களே அதிகமாக அடங்கியிருந்துள்ளன. ஆனால் இந்தத்தடவை புலிகளின் சமாதானத்திற்கான அழைப்பை புலிகளின் கொத்தடிமைகளான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மூலம் விடுகின்ற அளவிற்கு புலிகளின் சர்வதேச ஆதரவுகள் மழுங்கிக் கிடக்கின்றன. முன்னார் நோர்வேயிலிருந்து வருகின்ற பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று புலிகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிற அழைப்பை விடுவதுடன் அதற்கான ஒழுங்குகளைச் செய்வார்கள். ஆனால் நோர்வே தற்போது அனுசரணையாளர் பணியிலிருந்து ஒதுங்கியிருப்பதாலும் ஏனைய நாடுகள் புலிகள் விடயத்தில் அக்கறை செலுத்தாத நிலையில் இந்தப்பணியினைச் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கியுள்ளனர்.
புலிகளின் இராணுவத்தோல்விகளால் பெரிதும் பாதிக்கப்படுவது புலம்பெயர்நாடுகளில் இருந்து கிடைக்கின்ற வருவாயாகும். இராணுவ வெற்றிகளை புலிகள் குவிக்கும்போது வெளிநாடுகளில் அதிக வசூலை அவர்கள் பெறுவார்கள். ஆனால் கடந்த பலமாதங்களாக இந்த வசூலில் ஒரு வீழ்ச்சிநிலை காணப்படுகிறது. புலிகள் மீதான நம்பிக்கையிழப்பு அதிகரித்து வருகிறது. கிழக்கும் போய்விட்டது. குடாநாடும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மன்னார் பிரதேசத்தின் பல பகுதிகள் இராணுவ வசமாகி வருகிறது. இந்நிலையில் வன்னியும் பிடிபட்டால் புலிகளை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கின்ற புலம்பெயர் வாழ் பினாமிகளின் நிலை என்னாவது என்கிற அச்சம் உருவாகியுள்ளது. ஆகவே அவசர அவசரமாக பேச்சுவார்த்தைக்குப் போவதன் மூலம் இழப்புக்களை திரும்பவும் சரி செய்து கொள்ள முடியும் என்கிற திட்டத்தில் புலிகள் இறங்கியுள்ளனர்.
இதில் முதல் கட்டம் வெளிநாடுகளில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்து பேரணிகள் கருத்தரங்குகளை மேற் கொள்வதாகும். இதுவரை காலமும் புலிகள் தமது பேரணிகள் கூட்டங்களில் புலிகளின் தலைவரின் படங்கள், புலிச்சின்னங்களை முக்கியத்துவப்படுத்தி இவற்றை மேற்கொள்வது வழக்கமானதாக இருந்தது. ஆனால் இம்முறை இவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு கொல்லப்பட்ட தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுடன் இலங்கை அரசு மோசமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது. தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்கிற கோஷங்களுடன் ஐரோப்பிய தெருக்களில் இறங்கியுள்ளனர். புலிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாலும் சர்வதேச அளவில் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படாதாலும் இந்தப் பேரணிகளில் ஈடுபடுபவர்கள் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவத்தை முன்னிறுத்த முனைவதில்லை. அப்படி செய்வது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போன்றதாகும். ஆகவே புலித்தலைவரையும் புலிச்சின்னங்களையும் வைத்து புலிகள் தற்போது அரசியல் வியாபாரம் செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற புலிகளால் ஏன் முடியாது போனது?.
புலிகளிற்காக புலம்பெயர்நாடுகளில் இயங்கியவர்கள் புலிகளின் வருமானத்தை எதிர்பார்த்து இயங்கியவர்களாகும்: புலிகளுக்காக சேர்க்கப்படுகின்ற நிதியில் குறிப்பிட்ட பங்கு இவர்களின் சொந்த தேவைகளைப் ப+ர்த்தி செய்யவே பயன்பட்டன. சொந்த வீடு விலையுயர்ந்த வாகனம் வசதியான வாழ்க்கை எல்லாம் இந்த நிதியில் இருந்து கணிசமான அளவு சுருட்டப்பட்டதால் கிடைத்ததாகும். புலிகளின் பிரச்சார நடவடிக்கைகள் யாவும் புலம்பெயர்வாழ் தமிழ்மக்களிடையே அவர்களின் நிதிவருவாயை மையப்படுத்தி நடைபெற்றதாகும். ஐரோப்பிய மக்களிடையே இந்தப் பிரச்சார நடவடிக்கைகள் விரிவு படுத்தப்படவில்லை. ஒரு பக்கம் புலிகளின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இவர்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கின. கதிர்காமர் படுகொலையை ஏன் செய்தீர்கள் எனக் கேள்வியெழுந்தால் அதைச் செய்தது நாங்களில்லை எனத் தப்பித்து விடவும் அவர்களால் முடியவில்லை. பொதுவாகவே அரசியல் விளக்கம் கொடுக்குமளவிற்கு இவர்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. எங்காவது புலிப்பிரமுகர்கள் அக்கறையாக செயற்படுவதை நீங்கள் காண நேர்ந்தால் அது தமிழ்மக்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூலிக்கின்ற வழியாகத்தான் அது இருக்கும். அரசியல் ஆலோசகராக பாலசிங்கம் இருந்தவரைக்கும் வெளிநாட்டுப்பிரச்சாரங்களுக்கு அவர் மிகவும் பயன்படுத்தப்பட்டவராக இருந்தார். ஆனால் அவரது மறைவுக்குப் பின் அந்த இடத்தை ப+ர்த்தி செய்ய புலிகளுக்காக யாரும் தயாராக இருக்கவில்லை.
புலிகள் இயக்கத்தின் தோல்வி தமிழ்மக்களின் விடிவு என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. தமிழ்மக்களின் ஆதரவு இல்லாத சூழல்தான் புலிகளின் தோல்விகளைத் துரிதப்படுத்தியுள்ளது. பலவந்தமாக சிறுவர்களைப் படையணிகளுக்குச் சேர்த்து யுத்த முனைகளில் அவர்களைப் பலியிடுவதால் வன்னிப்பிரதேச மக்களிடையே புலிகளுக்கான அதரவை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கிறது. என்னத்துக்கு இந்தச்சண்டையைப் பிடிக்கிறாங்களோ தெரியவில்லை என்கிற மன ஆதங்கத்துடன் அங்கு மக்கள் காணப்படுகிறார்கள். எல்லாப்பிரதேசங்களையும் பறிகொடுத்துவிட்டு வன்னியை மட்டும் வைத்துக்கொண்டு தமிழீழம் காண்போம் என வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள் ஒருவித நப்பாசையுடன் வாழ்ந்து வருகின்றனர். தலைவர் எப்படியும் சிங்கள இராணுவத்தை அடித்து விரட்டுவார் என மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 25வருடங்களுக்கு மேலாக இந்த மலட்டுச்சிந்தனையுடன் வெளிநாடுகளில் இணர்டு தலைமுறைகளைக் கண்டு விட்ட இந்த கூட்டம் இன்னமும் தமிழீழம் கிடைக்கும் என கனவுடன் வாழ்ந்து வருகிறது.
யுத்தத்தோல்விகளின் நிமித்தம் பேச்சுவார்த்தைகளுக்கான சமிக்ஞைகளை புலிகள் வெளிப்படுத்த தொடங்கிவிட்டனர். புலிகளும் மனித உரிமை மீறல்களைச் செய்துள்ளனர் இருப்பினும் அவர்கள்தான் இன்றைய யதார்த்தம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் வழங்கத் தொடங்கிவிட்டனர். புலிகளை சிறியளவிலாவது விமர்சனங்கள் செய்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அவர்களை கொண்டு வர தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தயாராகி விட்டனர். புலம்பெயர் நாடுகளுக்கு இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பல கருத்தரங்குகளுக்காக வருகை தருவார்கள். புலிகளும் பிழை விட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் தமிழ்மக்களின் யதார்த்தம் என விளக்கம் தந்து அவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடாத்த அரசை நிர்ப்பந்தியுங்கள் என மேற்கத்தைய நாடுகளை இவர்கள் கேட்கக்கூடும். புலிகளை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிடில் தமது இருப்பிற்கே ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள். புலிகளுக்கும் தற்போது மூச்சுவிடுவதற்காவது சிறிதுகாலத்திற்கு யுத்த நிறுத்தம் தேவையுமாக இருக்கிறது. ஆனால் தமிழ்மக்களிற்கு? அதைப்பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?.
|