|
பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ கோரிக்கை
லண்டன் : 'பயங்கரவாத பயிற்சி முகாம்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் வந்துள்ள மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப் படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யை கட்டுப்படுத்தவும் முயற்சி எடுக்கவில்லை.
அங்கு செயல்படும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை அடியோடு ஒழிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் நிறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை, அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால், இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளுக்கும் ஆபத்து தான். இதை மற்ற நாடுகள் உணர வேண்டும். புனே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக, போதிய உளவு தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மாநில அரசும் பாதுகாப்பை அதிகரித்தது. இருந்தாலும், ஜெர்மன் பேக்கரி நிர்வாகம், குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை. இதனால், துரதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்து விட்டது. புனே குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என்பதை தற்போது கூற முடியாது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பின் தான், இதுகுறித்து தெரிவிக்க முடியும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
பிடிபட்ட அமெரிக்கர்களை கொல்வோம்: ஒசாமா பின்லாடன் திடீர் எச்சரிக்கை
துபாய்:அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய காலீத் ஷேக் முகமதுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், எங்களிடம் பிடிபட்டுள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் கொல்லுவோம் என, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை விமானங்களை மோதச் செய்து வீழ்த்தியது.
இது தொடர்பாக, இந்த அமைப்பைச் சேர்ந்த காலீத் ஷேக் முகமது உள்ளிட்ட சிலரை, அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே, அல்-குவைதா தலைவர் ஒசாமா பேசிய ஆடியோ 'சிடி'யை, அல் ஜசீரா 'டிவி' நேற்று ஒளிபரப்பியது. இதில், ஒசாமா கூறியிருப்பதாவது:அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய காலீத் ஷேக் முகமது உள்ளிட்டோருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டால், எங்களிடம் பிடிபட்டுள்ள அமெரிக்கர் களுக்கும் நாங்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவோம்.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ்ஷின் அடியொற்றி நடக்கிறார். எங்களுக்கு எதிராக அநீதி இழைப்பதை, வெள்ளை மாளிகையில் இருப்பவர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, பாலஸ் தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை அவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.அமெரிக்கா மீது தாக்குதல் நடக்கும் வரை, அவர்கள் உலகிலேயே பாதுகாப்பானவர்களாக கருதிக் கொண்டிருந்தனர். எங்களது தாக்குதலுக்கு பிறகு தான் இந்த நிலை மாறியுள்ளது. இவ்வாறு ஒசாமா கூறியுள்ளார்.
|