|
சீனாவின் வளர்ச்சி – ஒரு பார்வை (5)
20 ஆயிரம் புதிய நகரங்கள்
- ஜி.விஸ்வநாதன்
சீனாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் தயாராகின்றன என்றாலும், இரண்டு, மூன்று மாநிலங்கள் மட்டும் பல பொருட்களின் உற்பத்தித் தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று க்வாண்டாங். சீனாவின் மொத்த உற்பத்தியில் 30 சதவிகிதப் பொருட்கள் இந்த மாநிலத்தில்தான் தயாராகின்றன. தமிழ்நாட்டில் சிவகாசியில் தயாராகும் பட்டாசு வகைகள், வாணவேடிக்கை வகைகள், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கூட அனுப்பப்படுவது போல, சீனாவில் தயாராகும் வாணவேடிக்கை வகைகள் வெவ்வேறு நாடுகளுக்கு விற்கப்படுகின்றன.
குறிப்பாக, சில நாடுகள், தங்கள் நாடுகளில் நடக்கும் முக்கிய விழாக்களுக்கு, சீனாவில் இருந்துதான் வாண வேடிக்கையை இறக்குமதி செய்கிறார்கள். சீனாவில் எவ்வளவு குறைவான விலைக்குப் பொருட்கள் கிடைக்கின்றன என்பதற்கு, அந்நாட்டில் தயாராகும் வாணவேடிக்கை வகைகள் ஒரு உதாரணம்.
சீனாவில் இருந்து வாணவேடிக்கை வகைகளை இறக்குமதி செய்யும் வியாபாரிகள், தங்கள் நாட்டில் அதை விற்பனை செய்யும்போது 200 முதல் 600 சதவிகிதம் வரை லாபம் ஈட்டுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வியாபாரிகள் இவ்வளவு லாபம் வைத்து விற்பனை செய்தாலும், ‘ஏற்கக் கூடிய விலை’ என்றே அதை வாங்கி பயன்படுத்தும் மக்கள் நினைக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
இதேபோல மற்றொரு பொருளை உதாரணமாகச் சொல்வதானால், சீனாவில் தயாராகும் கூலிங்க்ளாஸ்கள் பிரசித்தி பெற்றவை. அங்கு அதன் விலை ஒரு டாலர். சீனாவில் தயாரான இந்த கூலிங்க்ளாஸ் அமெரிக்காவில் 35 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்கள் இதை குறைந்த விலை என்றே கருதுகிறார்கள். சீனாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாக இருப்பதற்கு, அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.
பெரும்பாலான பொருட்களை 2 முதல் 3 சதவிகித லாபத்துக்குத்தான் சீனா விற்கிறது. அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் சீனாவில் தயாரான பல பொருட்கள் விற்கப்படுகின்றன என்பது மாத்திரம் அல்ல; சீனாவிலேயே வால்மார்ட் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சீனப் பொருட்களின் விலை குறைவு காரணமாக, அதை அதிகமாக வாங்குவதால், அமெரிக்க குடும்பங்களுக்கு வருடத்துக்கு ஆயிரம் டாலர் அளவுக்கு மிச்சமாகிறது என்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் சிறிய பொருட்கள் - என்னென்ன, எந்தெந்த நாடுகளுக்குப் போகின்றன என்பது பற்றிய தகவல்களைப் பார்த்தோம். சட்டைப் பொத்தான் முதல் எலெக்ட்ரானிக் சாதனங்கள் வரை சீனாவில் இருந்து ஏற்றுமதியாகின்றன.
 சீனாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரானிக் மெஷின்கள் மற்றும் கருவிகளை, அமெரிக்காவே கூட இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. மின்சார உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள், இரும்பு மற்றும் எஃகு, மருத்துவ உபகரணங்கள், கப்பல் கட்டுவதற்கான தளவாடங்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனப் பொருட்கள்... என்று பல வகையானவை சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சீனப் பொருட்களை அதிகமாக வாங்கும் நாடுகளை வரிசைப்படுத்திச் சொல்வதானால் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, நெதர்லாந்து, இந்தியா, பிரிட்டன், சிங்கப்பூர், இத்தாலி ஆகியனவாகும். ஆக, வளர்ந்த நாடுகள் முதல் வளருகின்ற நாடுகள் வரை - அமெரிக்கா முதல் ஆஃப்ரிக்கா வரை தொழில் ரீதியாக சீனா பரவியுள்ளது என்று சொல்லலாம்.
தொழில் துறையின் வளர்ச்சிக்கு நகர்ப்புற மேம்பாடும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதும் அத்தியாவசியத் தேவைகளாகும். இத்துறைகளில் சீனா கண்டுள்ள வளர்ச்சியை சுருக்கமாகப் பார்ப்போம்.
சீனாவில் 2000-ஆவது ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ஏற்பட்டுள்ள நகர்ப்புறங்களின் வளர்ச்சி, உலகத்தில் வேறு எங்கும் காண முடியாதது. மேற்குறிப்பிட்ட 10 ஆண்டுகளில் மட்டும் 20 கோடி பேர் கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். தற்போது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள்.
இந்த குறுகிய காலகட்டத்தில் பேரூராட்சிகளாகவும், ஊராட்சிகளாகவும் இருந்த பல பகுதிகள் நகரங்கள் எனும் அந்தஸ்துக்கு மாற்றி அமைக்கப்பட்டு, பல வசதிகளைப் பெற்றுள்ளன. அந்த வகையில் 20 ஆயிரம் புதிய நகரங்களும், 360 மாநகரங்களும் அங்கு உருவாகியுள்ளன.
முக்கிய நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், தலைநகர் பெய்ஜிங்கில் 2 கோடி பேர் வசிக்கிறார்கள். சீனாவின் பொருளாதாரத் தலைநகரமான ஷாங்காயில் 2 கோடியே 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஷாங்காய் கண்டுள்ள வளர்ச்சியை, அசுர வளர்ச்சி எனக் கூறலாம்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநகரம், இவ்வளவு பெரிய நகரமாக உருவெடுக்க சுமார் 100 ஆண்டுகள் ஆகியது. ஆனால், ஷாங்காய் நகரம் கடந்த 15 ஆண்டுகளுக்குள் நியூயார்க் போல 2 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. Sky Scrapers என்று கூறப்படும் வானளாவிய உயரமான கட்டடங்கள் மட்டும் ஷாங்காய் நகரில் 4 ஆயிரம் உள்ளன.
நியூயார்க்கில் 2001-ல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட உலக வர்த்தக மையக் கட்டிடம், 1727 அடி உயரம் கொண்டிருந்தது. தற்போது உலகத்திலேயே உயரமான கட்டடம் துபாயில் உள்ளது. ‘புர்ஜ் காலிஃபா’ (Burj Khalifa) என்ற அந்தக் கட்டடம் 2717 அடி உயரமுடையது. 2010-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
நம்முடைய நாட்டில் உயரமான கட்டடங்கள் அனைத்துமே மும்பையில்தான் உள்ளன. மற்ற நகரங்களில் உயரமான கட்டடங்களைக் கட்ட அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைப்பதில்லை. இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அனுமதியைப் பெறுவதிலும் பல சிரமங்கள் உள்ளன. மும்பையில் 25 மாடிகள் அல்லது அதற்கு மேல் உள்ள உயரமான கட்டடங்கள் 1200 உள்ளன. மும்பையில் தற்போது வானளாவிய கட்டடங்கள் 85 கட்டப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்று உலக அளவில் இடம் பெறக் கூடிய வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2362 அடி உயரத்துடன் 125 மாடிகளைக் கொண்டதாக உருவாகி வரும் ’Sky Scrapers’ பில்டிங் பணி 2016-ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(தொடரும்)
நன்றி: துக்ளக்
|