|
இராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டிலுள்ள சில செயற்பாட்டுக் கும்பல்களின் காடைத்தனமான நடவடிக்கைகள் - (பகுதி – 2 )
- டி.பி.எஸ் ஜெயராஜ்
பிராமணர்கள்
அந்தச் சம்பவம் ஜனவரி 10 ந்திகதி நடைபெற்ற போதிலும் அதன் ஒலி முழக்கங்கள் இன்னமும் தொடர்கின்றன. 500 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட இராமேஸ்வரத்திலுள்ள பிராமணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு திருக்குமார்; நடேசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.மேலும் கடந்த ஜனவரி 20 ந்திகதி அதை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்த போதிலும் பின்னர் அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. பிராமணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரான சங்கர வாத்தியார் தற்சமயத்துக்கு மட்டும் அந்த உண்ணாவிரதப் போராட்டம் பின்போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அந்தக் காடைத்தனமான சம்பவம் நடைபெற்று பல நாட்கள் கடந்து விட்டன.அந்த பதட்டமான சம்பவத்தால் உள்ளுர் காவல்துறையினர்,ஊடகங்கள் மற்றும் அந்தப் பகுதி அரசியற் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு மத்தியில் உள்ள குறைந்த மட்ட உறவுகளுக்கிடையில் வெளிச்சம் பாய்ந்துள்ளது.அதற்கு மேலாக அந்த சம்பவம் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலுமுள்ள புலம் பெயர்ந்த பகுதிகளிலுமுள்ள ஊடகங்கள் சிலவற்றினால் திரிக்கப்பட்டும் தவறாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்தப் பத்தி ஜனவரி 10 2012ல் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றி விசேட கவனம் செலுத்த விரும்புகிறது.
திருக்குமாரன் நடேசன் ஜனவரி 7ந்திகதி சனிக்கிழமை இந்தியாவுக்கு வந்தார். கடந்த காலங்களில் நடைபெற்ற விரும்பத் தகாத நிகழ்வுகள் காரணமாக அப்படியான வருகைகளின்போது இந்தியாவில் பாதுகாப்பை கோருவது வழக்கமாக இருந்தது. அப்படிக் கோரிய போதிலெல்லாம் அது உடனடியாகவே வழங்கப்பட்டது.அதற்கான காரணம் என்னவென்றால் அவருடைய மனைவி நிருபமா ஜனாதிபதி ராஜபக்ஸவின் பெறா மகளாகவும் மேலும் அரசாங்கத்தின் ஒரு பிரதி அமைச்சராகவும் உள்ளபடியால் அப்படியான பாதுகாப்பு அவசியமாகிறது.ஆனால் இந்தச் சமயம் நிருபமா தன்னுடன் வராதபடியாலும் மற்றும் சமய நோக்கத்துக்காக அவரால் மேற் கொள்ளப்படும் தனிப்பட்ட யாத்திரை என்பதனால் நடேசன், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் அப்படியான வேண்டுதல் எதனையும் விடுக்கவில்லை.
நடேசன் திருச்செந்தூரில் உள்ள சித்திரா பார்க் ஹோட்டலில் தங்கியிருந்து தனது மதச் சடங்குகளை ஆரம்பிக்கலானார். முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகள் என அழைக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் ஆறில் திருச்செந்தூரும் ஒன்று.அது முருகக் கடவுள் தலைமை தாங்கிய தேவர்களுக்கும் மற்றும் தோற்கடிக்கப்பட்ட அசுரர்களுக்கும் இடையில் சண்டை நடந்த இடம் என்று நம்பப்படுகிறது.இங்கு முருகக் கடவுள் செந்திலாண்டவன் என்கிற பெயரால் வணங்கப்பட்டு வருவதுடன் அந்தக் கோவிலும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.
“கியு” பிரிவு
திருச்செந்தூரில் நடேசன் இருந்தவேளையில் அவர் உள்ளுர் காவல்துறையின் கியு பிரிவின் கண்காணிப்பின் கீழ் வந்தார்.தமிழ்நாடு குற்றவியல் புலன்விசாரணை திணைக்களத்தின்(சி.ஐ.டி) விசேட பிரிவாகிய கியு பிரிவானது, சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் மற்றும் விசேட புலனாய்வு தகவல்களைச் சேகரிப்பதற்காகவும் 1971ல் அமைக்கப்பட்டது. நடேசனது அடுத்த தங்கும் இடம் இராமேஸ்வரம் தான் என்பதை கியு பிரிவினர் நன்கு அறிந்திருந்தனர்.
நடேசன் ஜனவரி 9ந்திகதி திங்கட்கிழமை பி.ப 3 மணியளவில் இராமேஸ்வரத்தை அடைந்து றோயல் பார்க் ஹோட்டலில் தங்கினார். அவர் அங்கு வந்ததும் உள்ளுர் காவல்துறையின் கியு பிரிவினர் அவருக்காக ஹோட்டலில் காத்திருந்தனர். அன்று மாலையில் நடேசன் வழிபாட்டிற்காக இராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றார். கியு பிரிவைச் சோந்த இரண்டு உத்தியோகத்தர்கள் சாதாரண உடையில் அவருடன் சென்றார்கள். அவர் கோவிலை விட்டு வெளிவரும்போது, ஊடகத்தைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒருவர் திடீரென அவரை புகைப்படம் எடுத்தார். எப்படியாயினும் சீருடை அணிந்த காவல்துறையின் உத்தியோகத்தர் ஒருவர் புகைப்படப்பிடிப்பாளரை அமைதியாக வெளியே அனுப்பி வைத்தார். இரவு 8.30 மணியளவில் நடேசன் றோயல் பார்க் ஹோட்டலில் இரவு உணவை அருந்தினார், அங்கு அவரது விருந்தினராக கியு பிரிவினைச் சேர்ந்த ஆறு உத்தியோகத்தர்கள் வந்திருந்தனர்.
அதிகாலையிலேயே நடேசன் ஹோட்டலில் இருந்து புறப்பட்டார். அவர் அங்கிருந்து வெளியேறும்போது இரண்டு கியு பிரிவு உத்தியோகத்தர்கள் ஹோட்டலின் வரவேற்பு மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். ஸ்ரீலங்கா தமிழ் பக்தர் பின்பு மேலைவாசல் பகுதியில் உள்ள நெடுந்தெருவில் அமைந்துள்ள ஆர்சி.அனந்த தீக்சிதர் எனும் ஒரு பிராமண குருவின் வீட்டினை நோக்கிச் சென்றார்.
காலை 6 மணியளவில் அந்த வீட்டில் ஒரு சிரார்த்தச் சடங்கு நடைபெறத் தொடங்கியது. அது திருக்குமார் நடேசனுக்கு வேண்டி பிராமணக் குருமார்கள் நடத்தியது. அதில் மூதாதையர்களுக்கு வேண்டி தானம் கொடுப்பதற்காக பிராமணர்களால் உருவாக்கப்படும் பிண்டங்களால் மேற்கொள்ளப்படும் பிண்ட தானமும் உட்படும் .பிண்டங்கள் எனப்படுவது சமைத்த அரிசி அல்லது மாவுடன் நெய், தேன், ற்றும் கறுப்பு எள் என்பனவற்றை கலந்து உருண்டைகளாகத் தயாரிக்கப்படுவது. இந்தப் பிண்டங்கள் நம்மை விட்டுப் பிரிந்துபோன நமது மூதாதையரின் ஆவிகளுக்கு வேண்டி படைக்கப்பட்டு பின்னர் நீரில் கரைக்கப்படுவது. நடேசன் விடயத்தில் பிண்ட தானம் மாதா பிதாக்களின் மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூதாதையர்களுக்கு வேண்டி நடத்தப்பட்டது. நெடுந்தெருவில் உள்ள வீட்டில் நடந்த சடங்குகளின் பின், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர் இராமநாதசுவாமி கோவிலுக்கு கிழக்குப்புறமாக இருக்கும் அக்கினி தீர்த்தம் என அழைக்கப்படும் கடற்கரையை நோக்கி நடந்து சென்று, அங்கு அரிசி உருண்டைகளிலான பிண்டங்களை கடலில் கரைத்தார்.
இராமேஸ்வரத்தில் 64 வகையான புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு நீராடுவதோ அல்லது சமயச் சடங்குகளை நடத்துவதோ மிகவும் உத்தமமான நற்பலனைக் கொடுக்கும். அவையாவற்றிலும் மிக்க புனிதம் வாய்ந்தது இந்த அக்கினி தீர்த்தம் எனக் கருதப்படுகிறது. பிண்டங்களை கடலில் கரைத்த பின் நடேசன் மிகுதியான சடங்குகளை நிறைவேற்றுவதற்காக ஆனந்த தீக்ஷிதரின் வீட்டுக்குத் திரும்பினார். சமய முறைப்படி அவர் வெற்று உடம்புடன் வேட்டி மட்டுமே அணிந்திருந்தார்.
கேள்விகள்
திரும்பி வந்த நடேசன் வீட்டு வாசலில் ஆறு நபர்கள் நிற்பதைக் கண்டார். புகைப்படக் கருவிகள், ஒலிப்பதிவுக் கருவிகள், மற்றும் காணொளிப் பதிவுக் கருவிகள் போன்றவற்றை வைத்திருந்த அவர்கள் மூன்று உந்து வண்டிகளில் அவ்விடத்துக்கு வந்திருந்தார்கள். தாங்கள் பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் கேள்விக் கணைகளால் நடேசனைத் துளைத்தெடுத்தார்கள்.
அந்த பத்திரிகையாளர்கள் ஸ்ரீலங்காவிலுள்ள அரசியல் நிலைமைகளைப்பற்றியும் மற்றும் ராஜபக்ஸ குடும்பத்தைப் பற்றியும் கேள்விகளைக் கேட்டார்கள். தான் ஒரு அரசியல்வாதி அல்லவென்றும் மற்றும் தான் சமயச்சடங்குகளை நிறைவேற்றத்தான் இராமேஸ்வரம் வந்திருப்பதாகவம் அரசியல் நோக்கத்துக்காக அல்ல எனக்கூறி அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க பணிவுடன் மறுத்துவிட்டார் நடேசன். திடீரென 40இலிருந்த 50 வரையான பேர்களைக் கொண்ட கும்பல் ஒன்று வீதிக்கு மறுபுறமிருந்த ‘மூண் மெடிக்கல்ஸ்’ என்கிற மருந்தகத்துக்குள்ளிருந்து வெளியே தோன்றியது. அந்தக் கும்பலில் இருந்த அநேகமானவர்கள் காலஞ்சென்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் அல்லது பாயும் புலியின் படம் என்பவைகளைப் பொறித்த கறுப்பு நிற மேல் சட்டையை அணிந்திருந்தார்கள். இந்தக் கும்பலில் இருந்தவர்கள் நடேசனைச் சூழ்ந்து கொண்டு தமிழில் சுலோகங்களை உரக்க எழுப்பத் தொடங்கினார்கள்.
அவர்கள் சிங்களக் கடற்படையினர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்தியத் தமிழ் மீனவர்களை கொல்லும்போது, ராஜபக்ஸ குடும்ப அங்கத்தினர்களுக்கு இராமேஸ்வரத்தில் இடமில்லை எனச் சுலோகங்களைப் எழுப்பத் தொடங்கினார்கள். ஸ்ரீலங்காவில் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசாங்கத்து ஆட்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் கூச்சலிடத் தொடங்கினார்கள். கறுப்புக் கொடிகளையும் மற்றும் சுலோக அட்டைகளையும் வேகமாக அசைக்கத் தொடங்கினார்கள். நடேசன் அவர்களுக்கு விளக்கமளிக்க முயற்சி செய்தபோதும் அவரது குரல் கூட்டத்தினரின் குரல்களுக்குள் தேய்ந்து மறைந்து விட்டது. கூச்சல் குழப்பங்களைக் கேட்ட பிராமண குருமார்கள் வெளியே வந்து பார்த்தார்கள். திருக்குமாரின் பாதுகாப்பில் கவலையடைந்த குருமார்;கள் அவரை முற்றத்திலிருந்து வீட்டுக்குள் இழுத்து எடுத்தார்கள். தங்களுடைய இலக்கு தப்பிச் செல்வதைக் கண்ட கும்பலில் இருந்த காடையர்கள் சிலர் கொடிக் கம்புகளால் நடேசனைத் தாக்க முயன்றார்கள். சிலர் தங்கள் செருப்புகளையும் சப்பாத்துகளையும் அவர்மீது வீசி எறிந்தனர். ஆனால் நடேசன் பத்திரமாக வீட்டுக்குள் நுழைந்து விட்டார்.
தீக்ஷிதர்
கோபமடைந்த கும்பல் பிறகு பலாத்காரமாக வீட்டுக்குள் நுழைய முயன்றது, ஆனால் ஆனந்த தீக்ஷிதர் தலைமையிலான சமய குருக்கள் சிறிது நேரம் தைரியமாக அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு முன்கதவை உட்புறமாகப் பூட்டுவதில் ஓரளவு வெற்றி கண்டார்கள். இந்த தள்ளு முள்ளுகளில் ஆனந்த தீக்ஷிதருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அதன்பின் கும்பல் கோஷங்களையும் மற்றும் இனவாத தன்மையுள்ள அச்சுறுத்தல்களையும் முழக்கிய அதேவேளையில் வீட்டின்மீது கற்களையும் பாதணிகளையும் சரமாரியாக விட்டெறிந்தன.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுமார் 10நிமிடங்களுக்குள் காவலர்கள் காட்சிக்குள் பிரவேசித்து கும்பலை விரட்டியடித்தனர் .பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடேசன் மெய்க்காவலர்களுடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். குழப்பமான வெளிப்பாடாக ஒரு காவலர், தமிழ் தொழிலதிபரிடம் கூறியது ,அவருடைய உத்தியோகபூர்வ பாதுகாப்பு அலுவலராக தன்னை நியமித்துள்ள போதிலும் தனது மேலதிகாரிகளால் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நிற்காமல் தள்ளியிருக்கும்படி தனக்கு கட்டளை இpடப்பட்டிருந்தது என்று.
நடேசன் ஹோட்டலில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சிக்குச் சென்று அங்கிருந்து ஸ்ரீலங்காவுக்குத் திரும்பினார். இந்த ரௌடித்தனம் காரணமாக நடேசனுக்கு அவரது மதச்சடங்குகளை திட்டமிட்டபடி முற்றாக நடத்தி முடிக்க முடியாமலும் மற்றும் கோவில் எல்லைக்குள் உள்ள புனித தீர்த்தத்தில் நீராட முடியாமலும் போய்விட்டது.
எனினும் இந்தச் சம்பவத்துக்கு விரிவான விளம்பரம் கிடைக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல்களின் தலைவர்கள் ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கியதுடன் மற்றும் தாங்கள் செய்தவைகளையிட்டு பெருமிதமடையவும் செய்தனர். தமிழ் புலம்பெயர் அமைப்புகளில் உள்ள புலிகள் மற்றும் புலிகள் ஆதரவு ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ராஜபக்ஸ ஆட்சியினருக்கு எதிரான மிகப் பெரும் வெற்றி எனும் விதத்தில் அதைப் பிரசுரம் செய்தன.
ராஜபக்ஸவின் உறவினரான நடேசன், ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கம் ஆகியவற்றின் நலன் வேண்டி இராமேஸ்வரத்தில் ஒரு பூஜை வழிபாடு நடத்த முயன்றதாகச் சித்தரிக்கப்பட்டார். அந்த முயற்சியை தடுத்து நிறுத்திய இந்த ஆர்ப்பாட்டம் ஒரு வெற்றி எனவும் சித்தரிக்கப்பட்டது. கொழும்பு திரும்பிய பின்னர் திருக்குமார் நடேசன் ,தனக்கு நடந்தவைகளைப்பற்றி விபரித்து இந்தியத் தூதுவர் அசோக் காந்தாவுக்கு கடிதம் எழுதினார். அவர் மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் .ஜி.எல். பீரிஸ் மற்றும் புதுதில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் ஆகியோருக்கும் எழுதி அறிவித்திருந்தார். நடேசன் மேலும் ஊடகங்களின் ஒரு பகுதியினரிடம் அங்கு தனக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி தன்னைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மற்றும் தனக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
கண்டனம்
இதற்கிடையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கைகளை மேற்;கொள்ளும் முயற்சியை ஆரம்பித்தது. நடேசன் தனது சார்பாக உத்தியோகபூர்வ முறைப்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பிராமண குருவாகிய ஆனந்த தீக்ஷிதர், இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். .500க்கும் மேலான அங்கத்தவர்களைக் கொண்ட பிராமண குருமார்களின் கூட்டமைப்பு காவல்துறையினர்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினார்கள். இராமேஸ்வரத்தில் உள்ள பொதுமக்களின் கருத்து இந்தச் சம்பவத்தைப் பற்றி கண்டனம் தெரிவிப்பதாகவே உள்ளது. ஒரு விருந்தினரை கடவுளைத் தரிசிக்க விடாமல் தடுத்தது விருந்தோம்பல் கலாச்சார விதிமுறைகளை மீறிய ஒரு செயல் என கருதப்பட்டது.
இராமேஸ்வரம் காவல்துறையினர் தாங்கள் எதிர்பார்க்காத உள்ளுர் மக்களின் ஒரு பகுதியினரிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்ளும்படியாக இருந்தது. இந்தச் சம்பவத்துக்கு இராமேஸ்வரம் மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பதின்மூன்று இயந்திரப்படகுகளின் சங்கமும் மற்றும் 10 நாட்டுப் படகுகள் சங்கமும் பிரதிநிதிப்படுத்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அரங்கேற்றினார்கள்.
இயந்திரப்படகுகளின் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகிய என்ஜே.போஸ்; ஒரு வெளிநாட்டவர் மற்றும் ஒரு மதகுரு ஆகியோரைத் தாக்கியிருக்க கூடாது என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா மீனவர்களிடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகளைப் பாதிக்குமோ என போஸ் அச்சப்படுகிறார், ஏனெனில் அன்றைய ஆர்;ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும் பிரஸ்தாபித்திருந்ததால் அந்த ஆர்ப்பாட்டம் பழிதீர்க்கும் ஒரு செய்கை என்கிற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி விடுமோ என்பதுதான் அதற்கான காரணம்.
பெருக்கெடுத்த அழுத்தங்கள் காரணமாக காவல்துறையினர் விரைந்து செயற்பட்டு பொறுப்பானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர். சந்தேகப்படும் வட்டத் தலைவர்கள் ஏழு பேர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்கள். இராமேஸ்வரம் நீதிமன்ற நீதிபதி; அவர்களை 15 நாள் நீதி மன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதில் தொடர்புடைய மேலும் 40 பேர்களை சந்தேக நபர்களாக காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. ஆனந்த தீக்ஷிதர் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டங்களின் குற்றப்பிரிவு 506(1),294(பி), 427,448, மற்றும் 355 என்பனவற்றின் கீழ் முறையே, குற்றவியல் அச்சுறுத்தல்,ஆபாசமான வார்த்தைப் பிரயோகம், குறும்பு,வீட்டினுள் அத்துமீறி நுழைதல் மற்றும் தாக்குதல் மேற்கொள்ளல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுர சரக காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் நாயகம் சந்தீப் மிட்டல் த ஹிந்து பத்திரிகைக்கு கூறியிருப்பது, “அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள்” என்று.
ஆர்வலர்கள்
அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆர்வலர்களில் பெரும்பாலானவர்கள் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் (ம.தி.மு.க) மற்றும் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தையும்(என்.ரி.ஐ) சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களில் சிலர், ம.தி.மு.க வின் மாநில இளைஞர் அமைப்பின் உதவிச் செயலர், கராத்தே பழனிசாமி, நாம் தமிழர் இயக்கத்தின் இராமேஸ்வர அமைப்பாளர் இளங்கோ ஆகியோராவர் .வைகோ,மற்றும் சீமான் ஆகியோரைப் பின்தொடர்பவர்கள் இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனெனில் அந்த இரண்டு தலைவர்களுமே தீவிரமான எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களும் மற்றும் ஐக்கியமான ஸ்ரீலங்காவை உறுதியாக எதிர்ப்பவர்களுமாவார்கள். இந்த சக்திகளுடன் சில திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பிரிவினர்களும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்களில் இறங்கியுள்ளார்கள்.
திரைப்பட இயக்குனரும் மற்றும் நடிகருமான சீமான் அருவருப்பான இனவெறி கொண்டவர். தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதுக்கு பழிக்குப்பழி வாங்கும் முயற்சியாக இந்தியாவில் உள்ள சிங்களவர்களைக் கொல்லப்போவதாக பகிரங்கமாக அச்சுறுத்தல் மேற்கொண்டதுக்காக பல மாதங்களாக தமிழ்நாட்டில் அவரை சிறையில் தடுத்து வைத்திருந்தார்கள். சிங்கள மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இனவாத கருத்துக்களை வெளியிட்டதுக்காக சில காலங்களுக்கு முன்பு அவர் கனடாவிலிருந்து திருப்பி அனுப்ப பட்டிருந்தார். சமீபத்தில் சீமான் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு நியுயோர்க்கின் ஜோண் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப பட்டார்.
சீமானின் இயக்கம் ஒரு பாயும் புலியினையே அதன் இலச்சினையாக கொண்டுள்ளது. அவரது இளம் தொண்டர்கள் பிரபாகரனின் உருவம் சித்தரிக்கப்பட்ட கறுப்பு மேல் சட்டையை அணிந்து கரும்புலிகள் எனத் தங்களை விபரித்துக் கொள்கிறார்கள் .சீமானைப் போன்ற அரசியல் தலைவர்கள் என அழைக்கப்படுபவர்களின் சக்திமிக்க தீச்சுவாலை போல ஆத்திரமூட்டும் வாய்ப்பேச்சுக்களால் உணர்ச்சி வசப்பட்ட தமிழ்நாட்டு இளைஞர்கள் ஸ்ரீலங்கா மீதும் ராஜபக்ஸ ஆட்சி மீதும் எல்லைமீறிய வெறுப்பும் விரோதமும் பாராட்டுகிறார்கள். அநேகமாக பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் ஒடுக்குமுறை மூலம் தீவில் வாழும் தமிழர்களை அழிக்க நினைக்கும் பேய்கள் என்கிற எண்ணம் காரணமாக சிங்களவர்களுக்கு எதிரான இனவாதம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.
எச்சரிக்கையாகவிருக்கும் பண்பு
இத்தகைய இனவாதங்கள் தமிழ்நாட்டில் எப்போதும் எச்சரிக்கையாகவிருக்கும் ஒரு விழிப்புணர்வு புதியதாக உருவாவதற்கான வழியினைத் திறந்து விட்டுள்ளது. இந்த அரசியல் ஆர்வலர்கள் ராஜபக்ஸ அரசாங்கத்துடன் தொடர்புள்ள ஸ்ரீலங்காவாசிகளை வெளியேற்றுவது என்று தீர்மானித்துள்ளார்கள் .உணரப்பட்ட இலக்குகளுக்கு எதிராக அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்தாந்த மட்டத்தில் அவர்களின் குறிக்கோள் அரசியலாக உள்ள அதேவேளை உண்மையான நடவடிக்கைகளில் காணப்படும் அறிகுறிகளில் இனவெறியின் ஓசை பரவலாகக் கேட்கிறது. அரசியல்வாதிகளுக்கு மேலதிகமாக சாதாரண சிங்கள மக்களும் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம். லொக்குபண்டார திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பிரார்த்தனை செய்யப் போனபோது இத்தகைய ஒரு ஆர்ப்பாட்டத்தை சந்தித்தார். தமிழ்நாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிற்குத் தனது வாகனத்தைச் சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல் ‘ராஜபக்ஸவே உனது வீட்டுக்கு திரும்பிப் போ” எனக் கோஷமிடுவதைக் காண நேரிட்டது. விக்ரமசிங்கா தான் யாரென்பதை அந்தக் கும்பலுக்கு விளக்கியதுடன் ராஜபக்ஸவை வீட்டுக் அனுப்ப வேண்டுமாகவிருந்தால், முதலில் தன்னைப் போக அனுமதிக்க வேண்டும் என அவர்களிடம் கூறினார்.
கம்பகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரச வளங்கள் மற்றும் நிறுவனங்களின் அபிவிருத்தி அமைச்சருமான சரத்குமார குணரத்ன,வேளாங்கண்ணியிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றுக்குச் சென்றபோது தன்னை ஒரு கூட்டம் வழிமறித்த அனுபவத்தை எதிர்கொள்ள நேரிட்டது. சில முஸ்லிம் அமைச்சர்களும் ஆர்ப்பாட்டங்களுக்கு இலக்காக நேர்ந்துள்ளது. ஒரு மூத்த முஸ்லிம் கபினட் அமைச்சர் ஒரு இலக்கிய மாநாடு ஒன்றில் கலந்த கொள்வதற்காக தமிழ் நாட்டுக்குச் சென்றபோது குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி ஓசைப்படாமல் போய்வந்தார்.
தமிழ்நாடு கடந்த வருடம் பல இடங்களில் இனவெறி எதிர்ப்புகள் மற்றும் சிங்கள எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் என்பனவற்றைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது சிங்கள சுற்றுலாப் பயணிகளும் மற்றும் யாத்திரிகர்களும் அச்சுறுத்தப்பட்டதன் விளைவாக அவர்களில் நூற்றுக்கணக்கானோர் சென்னை எழும்பூரிலுள்ள மகாபோதி சங்கத்தில் பாதுகாப்பு தேடவேண்டி ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பௌத்த மற்றும் கத்தோலிக்க இடங்களுக்கு வழிபாட்டுக்காகவும் மற்றும் 1000 பேர்; வரையான காட்சிகள் காணச் சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகளும் திடீரென தமிழ்நாட்டில் தங்கள் தங்கலை இரத்துச் செய்துவிட்டு 2011 ஆகஸ்ட்டில் நாட்டுக்குத் திரும்ப நேரிட்டது.
கடந்தகாலத்தில் நடந்த இப்படியான நிகழ்ச்சிகளும் சமீபத்தில் இராமேஸ்வரத்தில் நடந்ததும் எதிரொலிப்பது மாநிலத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் இனவாதப் பதட்ட நிலையை.இந்த தணல்களை எந்த நேரத்திலும் காற்று ஊதி பெருப்பித்து பாரிய தீச்சுவாலையாக மாற்றி பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் எங்கும் பரப்ப முடியும். இராமேஸ்வரத்தில் நடந்த கலவரம் வெளிப்படுத்துவது, அரசியல்வாதிகள்,ஊடகம்,மற்றும் உள்ளுர் மட்டத்திலுள்ள காவல்துறையினர் ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்புகளை. இனவெறி காரணமாக இடம்பெறும் காடைத்தனமான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இடையேயுள்ள உறவுகளைப் பாதிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
வஞ்சப்புகழ்ச்சி
தமிழ் நாட்டிலுள்ள பழமையான இந்த இனவெறி சக்திகள் ஸ்ரீலங்காவை நோக்கிய இந்தியாவின் வெளிப்படையான கொள்கை நடவடிக்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக அமைந்திருப்பது உண்மையில் ஒரு பாசாங்குத்தனம். இந்தியா, இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளை வளாப்பதிலும் மற்றும் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இடையேயான சுற்றுலா பயணத்தை ஊக்குவிப்பது போன்றவற்றில் அதிக ஆர்வமாக உள்ளது. வியாபாரம் மற்றும் வர்த்தகம் என்பனவும் அபிவிருத்தியடைந்து வருகிறது. ஸ்ரீலங்கா தொழில்துறை நிபுணர்களை சி.ஈ.பி.ஏ போன்ற உடன்படிக்கைகள் மூலம் முக்கிய துறைகளில் இணைத்தக் கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளது.
இது ஒருமட்டத்தில் முன்னேறிவருகின்ற அதேவேளை ஸ்ரீலங்காவுக்கு பல வழிகளிலும் நெருக்கமாக உள்ள ஒரு மாநிலம் இணக்கம் மற்றும் நட்பு என்பனவற்றுக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்க முடியாத நிலையிலுள்ளது. இங்குள்ள அரசியல் சக்திகளினால் வெளிப்படுத்தப்படும் இனவெறி மனப்பாங்கு ஒட்டுமொத்த இந்தியாவின் கொள்கை நோக்கங்களைப் பலவீனப்படுத்துவதாக உள்ளது. தற்சமயம் இந்தச் சம்பவங்கள் வெறும் உறுத்தல்கள் என்கிற மட்டிலேயே உள்ளன, ஆனால் படிப்படியாக இந்த உராய்வு பெரும் விகிதாசாரத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்.
இந்தியாவின் மத்தி மற்றும் மாநிலத்தில் உள்ள அரசாங்க மட்டத்திலான அதிகார சக்திகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்படியான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான்.
தகுதியான ஒரு விசாவுடன் பொதுவாக இந்தியாவுக்கும் மற்றும் குறிப்பாகத் தமிழ் நாட்டுக்கும் பாதுகாப்பாகப் போய்வர ஒவ்வொரு ஸ்ரீலங்கனுக்கும் உரிமை உள்ளது. அதில் குறிப்பாக ஸ்ரீலங்காவாசிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கான அதி முக்கியத்துவம் வாய்ந்த மத மற்றும் கலாச்சார நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற பாதுகாப்பான வழிகளையும் மற்றும் பாதுகாப்பான தங்கலுக்கான ஏற்பாடுகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற காடைத்தனமான நடவடிக்கை போன்ற கேவலமான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தும் தமிழ் நாட்டு இனவெறியின் எச்சரிக்கையான நடவடிக்கைகளின் எழுச்சி கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்கள், அனைத்து; தமிழர்கள் தொடர்பான ஒற்றுமை என்கிற பெயரில் இனவெறிக் கும்பல்கள் செய்து வரும் இத்தகைய இழிசெயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
|