|
ஆஸ்திரேலியாவில் புலிகள் நிதி சேகரிப்பு.
-நமது தென் பசிபிக் பிராந்திய நிருபர்.
ஆஸ்திரேலியாவில் இப்போது புதிதாக புலிகள் நிதி சேகரிப்பதற்காக தனியார் வீடுகளுக்கும் வியாபார ஸ்தாபனங்களுக்கும் சென்று தமிழர்களை ஆய்க்கினைப்படுத்தி அழிச்சாட்டியம் செய்து வருகிறார்கள்.
 கடந்த வருடம் புலிகளின் ஆஸ்திரேலியப் பிரதிநிதிகளான சிவராஜா யாதவன்(37) ஆரூரன் விநாயகமூர்த்தி(33) ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரையும் வழக்கு நடந்துவருகிறது. அவர்கள் மீதான வழக்கு மிக வலுவானதென்றும் அவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். நிலமை இவ்வாறு இருக்கும்போதும் பரந்த அளவில் தீவிரமாக புலிகள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருப்பதானது ஏற்கெனவே வழக்குப்பதியப்பட்டுள்ள மூன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (இப்பெயரில்தான் ஆஸ்திரேலியாவில் புலிகள் இயங்கி வருகின்றனர்) உறுப்பினர்களையும் இன்னும் அதிக நெருக்கடிக்குள் மாட்டிவிடும் என்று அம்மூவரில் ஒருவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆஸ்திரேலியாவில் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்ட தமிழர்களிடம் மட்டும் நிதிசேகரித்தால் பிரச்சனை எதுவும் வரப்போவதில்லை என்றும் பரவலாக எல்லாத்தமிழர்களிடமும் நிதிகேட்டுச் செல்வதால் இந்நடவடிக்கை ஆஸ்திரேலிய புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலிய மத்திய பொலீஸின் கவனத்திற்கு செல்லுமென்றும் இது வழக்குப்பதியப்பட்டுள்ள தனது உறவினரின் வழக்குக்கு மிகப்பாதகமாக அமையும் என்றும் கூறினார்.
தமது நிதிசேகரிப்பு ஆஸ்திரேலிய மத்திய பொலீஸின் கவனத்துக்கு வருவதை தடுப்பதற்கு புலிகள் இரண்டு உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள்.
- ஊருக்குப்புதிதான வேற்றுமாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களை குறித்த தமிழ் வீட்டிற்கு அனுப்புதல். உறுப்பினர்களை இனங்காணமுடியாமல் இருப்பதால் புகார் செய்யமுடியாது.
- குறித்த வீட்டின் உறவினர் அல்லது நண்பர் ஒருவரை அவ்வீட்டிற்கு நிதி கேட்டுச் செல்லும் குழுவில் உள்ளடக்குதல். அவரின் “முகத்திற்காக” குறித்த வீட்டினர் புகார் செய்வதை தவிர்ப்பர்
கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போது பதவிக்கு வந்துள்ள தொழிற்கட்சி அந்நாட்டில் புலிகள் நிதி சேகரிப்பதைப்பற்றி கண்டும் காணாமல் இருக்கும் என்று அந்நாட்டின் புலிப்பிரமுகர்கள் தவறாக நம்புகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவின் தமிழர் சனத்தொகை மிகக்குறைவானது(ஏறத்தாழ 35000) இவர்களிலும் பெரும்பான்மையானோர் புலிகளின் அனுதாபிகள் அல்லர். தொகுதிவாரிப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையுள்ள ஆஸ்திரேலியாவில் பல தொகுதிகளிலும் நகரங்களிலும் சிதறி வாழும் தமிழர்களின் வாக்குகள் புறக்கணிக்கத்தக்க வகையில் மிகக்குறைவானது. மேலும் சிங்களவர் பறங்கியர் உள்ளிட்ட தமிழர்கள் அல்லாத 80000 சிறீ லங்கர்கள் இப்பொது ஆஸ்திரேலிய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்கிற போது தொழிற்கட்சிக்கு தமிழர்களின் வாக்குகள் ஒரு பொருட்டே அல்ல.
“இளங்கன்று பயம் அறியாதது” என்ற பழமொழிக்கமையவே புலிமுகவர்கள் ஆஸ்திரேலியாவில் பணம் சேகரிக்கிறார்கள் என்று கூறுகிறார் தமிழ் நோக்கர் ஒருவர்.
|