|
“மனித உரிமைவாதி” கருணாரட்ணம் அடிகளாரின் அகால மரணம்
- மாதுல்யன் -
 கொலை என்பது கண்டிக்கப்படவேண்டியது. யார் கொல்லப்பட்டாலென்ன? யார் அதைச் செய்தாலென்ன? அது கண்டிக்கப்படவேண்டியதொன்றே. அந்த வகையில் கருணாரட்ணம் அடிகளாரது கொலையும் கண்டிக்கப்படவேண்டியதே.
கருணாரட்ணம் அடிகளார் தமிழ் இளைஞர் அமைப்புக்களில் தீவிரமாக பங்காற்றியிருக்கின்றார். தீவிர அரசியல் போக்கைக் கடைப்பிடித்திருக்கின்றார். வங்கியிலே வேலை செய்திருக்கின்றார். இவையெல்லாவற்றிற்கும் பின்னர் தான் கருணாரட்ணம் அடிகளார் அதாவது தனது முப்பதின் நடுப்பகுதியில் தான் கத்தோலிக்க மதகுருவாக வரும் பொருட்டு இறைநூல் கலைக்கூடத்திற்கு (seminary) சென்றிருக்கிறார். வழமையாக கத்தோலிக்க மதகுருவாக இருக்கும் எவரும் இப்பின்னணியைக் கொண்டிருப்பதில்லை. மதகுருவாக வர நினைக்கும் எவரும் 15இற்கும் 20 இற்கும் இடைப்பட்ட வயதுகளிலேயே தம்மை இணைத்துக்கொள்வது வழமை. எனவே தான் புலிகளின் தூண்டுதலின் பேரில் மதகுருவாக வருவதற்கு நினைத்தாரா என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது. எது எவ்வாறிருப்பினும். அவரது கொலை கண்டிக்கப்படவேண்டும். கொலைக் கலாச்சாரம் அறவே அழிக்கப்பட வேண்டும்.
ஆனால் இங்கு வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், புலிகளுக்கு வேண்டப்படாதவர்கள் கொலை செய்யப்படும் பொழுது அவைகள் எதுவும் பெரிதாக வெளிவருவதில்லை. தாங்கள் செய்த கொலைகள் எதுவும் பெரிதுப்படுத்தப்படுவதை புலிகள் விரும்புவதில்லை. ஏன்… தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களது மரணச் சடங்குகளைகளைக் கூட (வன்னிக்கு வெளியே) கொண்டாட …. மனம் விட்டு அழுது ஆறுதல் அடைவதற்குக் கூட புலிகள் அனுமதிப்பதில்லை.
2004ஆம் ஆண்டு தமிழ் அமைச்சர் ஒருவரைக் குறிவைத்துச் சென்ற பெண் தற்கொலைப் போராளி தன்னை வெடிக்க வைத்துச் சிதறிச் செத்தமை அனைவரும் அறிந்ததே. இதனை கேள்விப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் “சீ… அவனைக் கொல்லாமல் செத்துப் போனாள் விசரி” என்று பேசிக் கொண்டனர். மறு தினம் தான் தெரியவந்தது. இறந்தவர் இவர்களது மகள் என்று. பெற்றோர்க் கத்திக் குளறி ஒரே ஒப்பாரி. இதையறிந்த உற்றார், உறவினர்கள் ஆறுதல் கூற வீட்டுக்குச் சென்றதையறிந்த புலிகள், மரணமடைந்த பெண்ணின் பெற்றோரை எச்சரித்தனர். அழவும் கூடாது, ஒன்றும் கொண்டாடவும் கூடாதென்று. செத்துப்போன பெத்த பிள்ளைக்காக அழக்கூட முடியாதநிலை சாதாரண தமிழ் மக்களுக்கு.
ஆனால் அண்மையில் அகால மரணமடைந்த கருணாரட்ணம் அடிகளாருக்கோ பாண்ட் வாத்தியங்கள் சகிதம் மிகவும் கோலாகலமான இறுதி மரியாதை. புலி ஊடகங்களே இனி இல்லையென்றளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது இவரது மரணத்திற்கு. தாங்களும் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பதற்காக புலிப் பினாமிகளும், தம்மை நடுநிலையாளர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் இவரை ஒரு பெரிய மனித உரிமைவாதியாகவும். ஏதோ அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்து மரணித்த ஒரு உத்தமர் போலவும் சித்தரித்து விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள். அத்துடன் மட்டும் நின்று விடவில்லை. உலகளாவிய ரீதியில் இந்தக் கொலை கண்டிக்கப்படவேண்டுமென்று வேறு எழுதினார்கள்.
கொலைகள் கண்டிக்கப்படவேண்டியதொன்றுதான். இதில் மறு கேள்விக்கேயிடமில்லை. ஆனால், சென்ற வருடம் தை மாதம் சந்திவெளியிலே வைத்து ஐந்து பிள்ளைகளின் தந்தையான பரமேஸ்வரக் குருக்கள் நடுவீதியிலே வைத்து நாய் போலச் சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தக் கூட்டம் ஏன் இவ்வளவு தூரம் கண்டிக்கவில்லை? எதற்காக சர்வதேசம் கண்டிக்கவேண்டுமென்று கேட்கவில்லை? கருணாரட்ணம் அடிகளார் கத்தோலிக்கர்… பரமேஸ்வரக் குருக்கள் இந்து என்பதனாலா? அல்லது கருணாரட்ணம் அடிகளார் இங்கிலீசு தெரிஞ்ச பிழைக்கத் தெரிஞ்சவர்… குருக்கள் ஆங்கிலம் தெரியாத அப்பாவி என்பதாலா? அல்லது கருணாரட்ணம் அடிகளார் வசதியாக வாழ்ந்தவர்.. குருக்கள் ஏழ்மையில் வாடியவர் என்பதாலா? இவையனைத்துக்கும் மேலால்.. ஓர் அரசியலுள்ளது.
புலிகள் கிழக்கை முற்றுமுழுதாக இழந்துவிட்டார்கள். ஒரு காலத்திலே “தலைவரின் வழி நடத்தலிலே ஆனையிறவை தகர்த்ததுவிட்டோம்.. மாங்குளத்தை தகர்த்துவிட்டோம். கோட்டையிலே கொடி பறக்கப் போகின்றதெல்லாம் ஆர்ப்பரித்த புலிகள் இன்று படைகளின் முன்னோக்கிய நகர்வைத் தடுத்துவிட்டோம் என்று விழுந்தும் மீசையிலேயே மண்படவில்லை என்று கூறுமளவிற்கு தான் புலிகள் உள்ளனர். தலைவருக்கு முடக்குவாதம் உள்ளதால்தான் வழிநடாத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. (இடைக்கிடை கரடி பிறைக் கண்டவாறு Transformer தாக்குதல்கள். குண்டுத் தாக்குதல்கள் நடக்கும்). ஒரு காலத்திலேயே தாம் வெல்லப்படமுடியாதவர்கள் (Invincible) என்று மார்த்தட்டித் திரிந்த புலிகள் இன்று படிப்படியாக தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை இழந்து வருகின்றார்கள். வன்னியில் யுத்தம் தொடர்வதற்கு ஒத்தாசையாக இருக்கும் வெளிநாட்டு தறிகெட்ட தமிழர்கள் புலிகள் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் புலிகள் பாவிக்கும் புதிய ஆயுதம் தான் “மனித உரிமை மீறல்”. அதாவது “இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது. எனவே சர்வதேசமே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு யுத்தத்தை நிற்பாட்டு” என்று தனது ஊடகங்களுக்கூடாகவும், பினாமிகளுக்கூடாகவும் NGO காகங்களுக்கூடாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் புலிகள்.
புலிகள் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பஞ்சமாபாதங்கள் எதையும் செய்வதற்கு பின்நிற்பதில்லை. உயரிய நோக்குடன் புலிகளுடன் தம்மை இணைத்துக் கொண்ட பெண் பிள்ளைகள் பலர் இன்று கொழும்பிலே விபச்சாரத்திற்காக புலிகளால் அனுப்பப்படுகின்றார்கள். படை அதிகாரிகள், அதிகாரிகளுடன் நெருக்கிய உறவு வைத்திருப்பவர்களுடன் பாலியல் ரீதியான உறவுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தகவல்களைப் பெற்று புலிகளின் தகவல் பிரிவிற்கு அனுப்பும் நோக்குடனேயே அவர்கள் அனுப்பப்படுகின்றார்கள். இப்பேற்பட்ட பாதகச் செயலை வேறு எந்த இயக்கங்களும் செய்ததுமில்லை. செய்ய நினைத்ததுமில்லை.
அரசு படைகள் பலமுறை முயற்சி செய்தும் கிட்டவே நெருங்க முடியாமலிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரின் செட்டிக்குள முகாமை அரச படைகளுடன் சேர்ந்து தாக்கியழித்து சொந்தச் சகோதரர்களையே கொன்று குவித்தவர்கள் புலிகள்.
இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கென வட கிழக்கில் உருவாக்கப்பட்ட மாகாண சபையை பிரேமதாசவுடன் சேர்ந்து கலைக்கப்பண்ணி குழப்பியடித்தவர்கள புலிகள்.
செல்லக்கிளி போன்ற தமது சொந்த உறுப்பினர்களையே கொன்றவர்கள் புலிகள்.
இப்பேர்ப்பட்ட புலிகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கருணாரட்ண அடிகளாரைக் கொன்றிருக்கமாட்டார்கள் என்று புலிகளைப் பற்றி நன்கு அறிந்த எவரும் நினைக்க முடியாது.
எதற்காக பாதிரி கருணாரத்தினம்?
மனித உரிமைப் பற்றிப் பேசுவதற்கே அருகதையற்ற புலிப் பாதகர்கள், பாதிரி கருணாரத்தினத்தை இவர் ஒரு கத்தோலிக்கர் என்பதாலும், இவரை ஒரு “மனித உரிமைவாதி” யாகக் காட்டப்பட்டிருந்ததாலுமே கொலை செய்யத் தீர்மானித்தார்கள். புலி ஊடகங்கள் தவிர்ந்த ஏனைய ஊடகங்களிலும் இவரது மரணத்திற்கு முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றால்.. அதற்கான காரணம் கத்தோலிக்க சமயமும் “மனித உரிமையும்”தான்.
இதே சமயம் ஒரு இந்து மதகுருவோ அல்லது சாதாரண கந்தசாமியோ இறந்திருந்தால் புலிகள் தவிர்ந்த ஊடகங்களோ அல்லது பத்தி எழுத்தாளர்களோ இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார்கள். புலிகளுக்கு நன்கு தெரியும். கத்தோலிக்க பாதிரியை கொன்றால்தான் வத்திக்கான்வரை செய்தி செல்லும். சர்வதேசம் தலையிட்டு சண்டையை நிற்பாட்டி தன்னை பாதுகாக்கும் என்பது. வத்திக்கான் வரை மறைந்த “மனித உரிமைவாதி” செய்தி சென்றதென்பது உண்மை. ஆனால்.. இற்றைவரை சர்வதேசம் எதையுமே கணக்கிலெடுத்ததாகத் தெரியவில்லை.
ஏன்?... எதற்காக?....
தென்னாபிரிக்காவிலே நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையிலேயே நிறவெறி ஆட்சிக்கு எதிராக மக்கள் இயக்கம் வழி நடாத்தியவர்களில் டென்மண்ட் ரூட்டோ குறிப்பிடத்தக்கவர். அந்த நேரத்திலே டென்மண்ட் ரூட்டோ அவர்களுக்கு இப்பேற்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்குமென்றால்… சர்வதேசம் பொங்கி எழுந்திருக்கும். மக்கள் பொங்கி பெரும் விபரீதமே ஏற்பட்டிருக்கும். எனென்றால் சர்வதேசம் அவரை “உண்மையான” மனித உரிமைவாதியாகத்தான் பார்த்தது.
ஆனால் எங்கள் கருணாரத்தினம் அடிகளாரின் விடயத்தில் சர்வதேசம் என்றாலும் சரி, தமிழ் மக்கள் என்றாலும் சரி. இவரைப் புலியாகத்தான் பார்த்தார்களே தவிர, இவரை ஒரு மதகுருவாகவோ அல்லது மனித உரிமை வாதியாகவோ பார்க்கவில்லை. (அப்பகுதி மக்களில் சிலர் இவரிடம் பாவமன்னிப்புக் கேட்பதே பாவம் என்று எண்ணி இவரிடமிருந்து விலகியிருந்தார்கள். கிளிப்பிள்ளைபோல இவர் புலிகள் சொல்வதையே சொல்லி, செய்து வந்ததால்தான் இவரை சிலர் “கிளிச்சுவாமி” என்று அழைத்தார்கள்).
ஏதோ ஒரு மனித உரிமை அமைப்பொன்றைத் தொடங்கி, அதற்குப் பொறுப்பாக கருணாரத்தினம் அடிகளாரை நியமித்து, அறிக்கைகள் விட்டுவிட்டால் சர்வதேசம் அடிகளாரை மனித உரிமைவாதியாகப் பார்க்கும் என்று புலிகள் கனவு கண்டனர். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. மனித உரிமை அமைப்புக்களை நடத்துபவர்கள் எல்லாம் மனித உரிமைவாதிகளுமல்ல. வெள்ளை அங்கியோ அல்லது காவி அங்கியோ அணிச்தவர்களெல்லாம் மதகுருமாருமல்ல ஜனநாயகம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகளுமல்ல.
புலிகள் தமிழ்த் தலைவர்களைக் கொன்றார்கள். சக விடுதலை இயக்கத் தலைவர்களைக் கொன்றார்கள். கல்விமான்களைக் கொன்றார்கள். பச்சிளம் பாலகர்களைக் கொன்றார்கள். வன்னி மக்கள் தமது பிள்ளைகளைப் புலிகளிடமிருந்து காப்பாற்றுவதற்குப் படாதபாடு படுகின்றார்கள். இவைகள் அத்தனையையும் பார்த்து, தெரிந்திருந்தும் கூட வாய் மூடி மௌனியாக இருந்தவர் தான் இந்த “மனித உரிமைவாதி” கருணாரத்தினம் அடிகளார்.
என்றைக்காவது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் பற்றி ஒரு வரிதனிலும் எழுதியிருக்கின்றாரோ என்றால், இல்லை. இப்போது இலங்கையிலே மனித உரிமை பற்றிப் பேசுவது வியாபாரமாகிவிட்டது. தங்கள், தங்கள் எஜமான்களின் விருப்பிற்கேற்ப புனைகதை எழுதி பச்சை நோட்டுக்களால் சட்டைப்பையை நிரப்புவார்களாக மாறிவிட்டார்கள்.
பிழைப்புக்காக இனியும் யாராவது கருணாரத்தினம் அடிகளாரை மனித உரிமைவாதியாக என்று எண்ணுபவர்களாக இருந்தால்… அவர்கள் கண்ணை ஏதோ மறைக்கின்றது என்பது தான் அர்த்தம்.
|