|
தேர்தல் காலத்து உளறல்கள்.
- தேசாபிமானி
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரமேடைகளில்; கட்சிகள் தங்களை அறியாமலே சில உண்மைகளை ஏற்றுக்கொண்டுவிடுகின்றன. அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்மைப்பும் சில உண்மைகளை வெளிப்படுத்தயுள்ளன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியலமைப்;பை மாற்ற அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தரவேண்டும் என்ற கோரிக்கையையே ஜனாதிபதி மக்களிடம் முன்வைக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுக்கக்கூடாது என்பதிலேயே கருத்தாக உள்ளனர் என்பது அவர்களின் பிரச்சார மேடைகளில் இருந்து அறிய முடிகிறது.
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், மற்றும் தேர்தல் முறைமையை மாற்றுதல் போன்றவற்றிற்காக ஆளும் தரப்பு முன்வைக்கும் அரசியலமைப்பு திருத்த யோசனை தனிக்குடும்பத்திற்கோ அல்லது தனிக்கட்சிக்கோ நன்மையளிப்பதாக அமைந்தால் அந்த யாப்பு திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான ஆதரவை தமது கட்சி வழங்காது என்று ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா கூறியுள்ளார்.
இவருடைய கூற்று ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியே உறுதிப்படுத்துவதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்தை துணைக்கழைத்தாலும் ஜனாதிபதியுடன் பேசித்தான் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதையும் சில இடங்களில் தெரிவித்துள்ளனர்.
இனப்பிரச்சினை தொடர்பாக பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ் தலைவர்களுடன் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதால் தங்களையே தெரிவு செய்யவேண்டும் என்ற கருத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சில இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஜனாதிபதியுடன் பேச தம்மை தெரிவு செய்யுமாறு கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதே ஜனாதிபதி இனப்பிரச்சினை தொடர்பாக பேச வருமாறு கடந்த காலங்களில் அழைப்பு விடுத்த போது ஏன் அந்த அழைப்புகளை தட்டிக்கழித்தனர்? ஒரு வேளை இவர்களுடன் கூட்டு வைத்துள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்திய வெளியுறவு செயலாளரிடம் தெரிவித்திருப்பதுபோல் பெரும்பான்மை சிங்களவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று இவர்களும் இப்போது நம்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் மக்களின் வாக்கு பலத்தை பாவித்து 51 நாடுகள் ஆதரவளித்திருந்த ஒஸ்லோ உடன்படிக்கை அடிப்படையில் தீர்வொன்றைக் காண தமிழ் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று மாவை சேனாதிராசா தெரிவிக்கிறார். தமிழர் பிரச்சினை ஐ.நா.சபை மேசையில் ஏழாவது கோப்பாக (குடைந) இருக்கிறது என 1977ம் ஆண்டு மேடைகளில் கூறி மக்களை ஏமாற்றியது போல் இப்போதும் சர்வதேசத்தை காட்டியே மக்களை ஏமாற்றலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைக்கிறது.
என்ன வாக்குறுதிகளை கொடுத்தாவது, மற்றவர்கள் மேல் எந்த குற்றசாட்டுகளை சுமத்தியாவது பாராளுமன்றக் கதிரையை பிடிக்கவேண்டும் என்பது அரசியல்வாதிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் பொது அமைப்புகள், மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களே மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாக உள்ளன.
யுத்தத்தின் காரணமாக வெளியேறி முகாம்களில் தங்கி தற்போது அப்பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மூட்டை முடிச்சுக்களுடன் மரங்களின் கீழும் இடிந்த நிலையில் உள்ள வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் இவர்களுக்கு பொது நிறுவனங்கள் உதவி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காததால் அவர்கள் துன்பதுயரங்களுடன் நிம்மதியாக வாழமுடியாமல் திண்டாடுவதாகவும் யாழ் ஆயர் வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு சுமார் 15 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் 100 கோடி ரூபா செலவில் 2700 வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா தெரிவித்துள்ளார். முன்னாள் புலி உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த 1500க்கு மேற்பட்டவர்களின் மீள்வாழ்விற்கு உதவ யு.எஸ்.எய்ட் அமைப்பு முன்வந்துள்ளதாக அதன் வதிவிட இயக்குனர் தெரிவித்துள்ளார். மீன்பிடி, விவசாயத் துறைகளில் ஈடுபடும் இவர்களுக்கான நீர்இறைக்கும் இயந்திரங்கள், மற்றும் இயந்திர சாதனங்கள் உட்பட பல அடிப்படை உபகரணங்களை இவ்வமைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்களில் யார்கூறுவது உண்மை?
- தேசாபிமானி
28.03.2010
|