|
ஈரானைத் தாக்க அதிக சக்தி வாய்ந்த குண்டை தயாரிக்கிறது அமெரிக்கா
தரைக்கடியில் அரண்போன்ற மிக பாதுகாப்பான இடத்தில், ஈரான் அணு சக்தி உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றை அழிக்க தரை, மலை, பாறை, கான்கிரீட் போன்ற பரப்பை குடைந்து சென்று தாக்கவல்ல அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. இவை வெகு விரைவில் தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகள் தரைக்கடியில் ரகசியமாக யாருக்கும் தெரியாத இடங்களில் அமைத்துள்ள அணுசக்தி உற்பத்தி நிலையங்களை தகர்க்க 5300 பவுண்டு (2404 கிலோ) வெடிமருந்து நிரப்பிய 20 அடி உயர குண்டுகளை அமெரிக்கா ஏற்கெனவே தயாரித்துள்ளது.
இந்த குண்டுகள் 200 அடி தொலைவுக்கு தரை, பாறை, அல்லது கான்கிரீட் பரப்பை துளையிட்டு சென்று இலக்குகளை தகர்க்க வல்லவை.
இவற்றை சோதித்துப் பார்த்தபோது தரைக்கடியில் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள அணு சக்தி நிலையங்களை தகர்க்க உதவாது என்கிற முடிவுக்கு வந்துள்ளது அமெரிக்கா. எனவே, பங்கர் பஸ்டர் என்கிற இந்த ரக குண்டுகளை மேம்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பேட்டி கண்டபோது தெரியவந்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது மேம்படுத்தப்பட்டுவரும் குண்டுகள் 13,600 கிலோ எடையுடையதாக இருக்கும். இது ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள குண்டுகளைவிட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும். தரையை துளையிட்டு தாக்கவல்ல 20 குண்டுகளை சுமார் ரூ. 1630 கோடி (33 கோடி டாலர்) செலவில் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது அமெரிக்கா.
இந்த குண்டுகளை மேம்படுத்த ரூ. 405 கோடி (8.2 கோடி டாலர்) கூடுதல் நிதி உதவி கேட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுகியுள்ளது ராணுவ தலைமையமான பென்டகன். தற்போதைய பங்கர் பஸ்டர் ரக குண்டுகள் உரிய பலனை அளிக்காது என்பது சரிதான் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டாவும் வால் ஸ்ட்ரீட் ஜார்னலுக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார்.
எந்த நாடாக இருந்தாலும் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் ரகசியமாகத் தரைக்கடியில் அணுசக்தி உற்பத்தி நிலையங்களை அமைக்குமானால் அந்த நாடுகள் எதிரி நாடுகள் தான். அந்த அணுசக்தி நிலையங்களை அழிக்க தயங்கமாட்டோம் என்றும் பனேட்டா தெரிவித்தார்.
பார்டோவில் மலைப்பகுதியை குடைந்து தரைக்கடியில் ஈரான் அணு சக்தி உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.இந்த நிலையத்தின் மேல் 212 அடி உயரத்துக்கு மலை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வட கொரியாவிலும் இதுபோல் ரகசிய இடத்தில் அரண்போன்ற பாதுகாப்பு மிக்க இடத்தில் அணு சக்தி உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
|