|
மட்டு. தமிழர் பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு முயற்சி
- கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்
வடகிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்வதனாது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடி சுவாமிமலை (135ஊ) கிராமசேவையாளர் பிரிவில் உள்ள புராதன காலத்து அடையாளங்கள் உள்ள பகுதியிலும் மக்கள் யாரும் அற்ற பகுதியிலும் இராணுவம் பொலிசார் உதவியுடன் சிங்கள பொதுமக்கள், ஒரு சில பௌத்த துறவியின் உதவியுடன் இக்காணியில் சிரமதான வேலைகள் நடப்பதோடு பௌத்த விகாரை அமைக்கும் பணிகளும் நடைபெற முயற்சிகள் நடைபெறுகின்றனவா என்னும் சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுள்ள மலை மலைசார்ந்த காணியில் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புராதன காணி ஊடாகவே கெவிழியாமடுக் கிராமத்திற்கு மக்கள் சென்று வருவது வழமையாகும். இப்பகுதியில் தமிழ் மக்கள் இருக்கும் போது வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து இப்பணியை செய்வதில் உள்நோக்கம் உள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இப்பகுதியை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பகுதியாகும். இப் பகுதியில் 140 சிங்கள குடும்பங்கள் கடந்த நான்கு வருடத்துக்குள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டவை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப்பகுதி புராதன காலத்து பல அடையாளங்கள் இருந்ததை இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் நீண்டகாலமாக பாதுகாத்து வந்தனர். யுத்த காலத்தில் கூட எந்த சேதமும் இதற்கு விளைவிக்கப்படவில்லை.
இப்பகுதியில் புராதன அடையாளங்களை அழித்து பௌத்த விகாரை அமைத்து புதியதொரு வரலாற்றை உருவாக்குவதென்பதை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இச்செயலானது இருசமுகத்திற்கும் உள்ள உறவை திட்டமிட்டு சீர்குலைக்கும் முயற்ச்சியாகும்.
பட்டிப்ளை பிரதேச செயலாளர் பிரிவில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபராலும் பிரதேச செயலாளராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஒரளவு அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். தற்சமயம் 120 தமிழ் குடும்பங்களும், 220 சிங்களக்குடும்பங்களும் உள்ளனர்.
இன்னிலையில் 75 ற்கு மேல்பட்ட சிங்களக் குடும்பங்கள் அத்துமீறி வாழ்ந்துவருகின்றனர். இவைமட்டுமின்றி இப்பகுதியான கெவிழியாமடுவில் 7 தமிழர்களின் வயல்காணிகளை சிங்களசகோதரர்கள் அத்து மீறிபயிர் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட சில தினங்களாக இராணுவமும் பொலிஸாரும் ஒரு இனத்தின் அடையாளத்தை, மதச்சின்னத்தை நிறுவுவதற்கு ஒருபக்கச்சார்பாக சட்டத்தை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குவதென்பது இந்தநாட்டில் முப்படையினர் சிங்களமக்களுக்கு மட்டும் உரியவர்கள் என்பதை புடம்போட்டுக் காட்டுகின்றது.
குறிப்பாக 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இதே இடத்தில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்துவந்த பகுதியில் விகாரை அமைப்பதற்கும் திட்டமிட்ட குடியேற்றம் மேற்கொள்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தமிழ்மக்கள் தெரிவித்த பலத்த எதிர்ப்பாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணேசலிங்கம் அவர்களின் நடவடிக்கையினாலும் அது கைவிடப்பட்டது.
மீண்டும் சமூகத்துக்கு மத்தியில் இன,மத முரண்பாடுகளை தோற்றுவிக்ககூடியவாறு இச்செயலைசெய்வதென்பது தடுத்து நிறுத்த வேண்டியதாகும். எனவே உடனடியாக இதனை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|