|
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கும் செய்திதான் என்ன?
- தேசாபிமானி
 இலங்கையின் 6வது ஜனாதிபதி யாh? மகிந்த ராஜபக்ஷவா ஜெனரல் பொன்சேகாவா என்ற கேள்விக்கு கடந்த 26ம் திகதி நடைபெற்ற தேர்தலில் 104,95,451 வாக்காளர்கள் விடையளித்து விட்டார்கள். இந்த தேர்தலில் என்றும் இல்லாதளவுக்கு 74.40 விதமானோர் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர். மொத்த வாக்காளர் தொகை 140,88,500 ஆகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 60,15,934 வாக்குளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 57.88 ஆகும். தமிழ் மக்களின் வாக்குகள் அதிகமாக எதிர்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு விழுந்த போதிலும் மகிந்த ராஜபக்ஷ 18,42,749 வாக்குகளை மேலதிகமாக பெற்றுள்ளார். இந்த வெற்றி ஒரு செய்தியை தமிழ் மக்களுக்கு அறிவித்துள்ளது. அது ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி நீங்களல்ல என்பதே.
தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெற்றால் தனது வெற்றி நிச்;சயம் எனக் கூறிவந்த சரத் பொன்சேகா 41,73,185 வாக்குகளே பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும். இவரை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகள் 47,06,366 ஆகும். இம்முறை தேர்தலில் சுமார் 76 ஆயிரத்துக்கு அதிகமானோர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சரத்தின் தோல்வி எதிர்பார்க்கப்படாத பெரும் தோல்வியாகவே கருதவேண்டும்.
ஜனாதிபதி வேட்பு மனு தாக்கல் செய்த காலத்தில் சரத் பொன்சேகாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பரவலான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. நிரந்தர வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, தென்மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி), முஸ்லி;ம் காங்கிரஸ், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ,மலையக மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியின் வேட்பாளர் என்பதுடன் இராணுவத் தளபதியாக இருந்து யுத்தத்தை நடத்தியவர் என்பதால் சரத்பொன்சேகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற அபிப்பிராயம் இருந்ததில் நியாயம் உண்டு. மேலும் மக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை விருப்புகிறார்கள் என்ற கருத்தும் பரவலாக அதிகமாக காணப்பட்டது
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிலும் ஆரம்பத்தில் சரத்துக்கே அதிக வெற்றி வாய்ப்பு காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு கிழமைகளில் மக்கள் அபிப்பிராயம் மாறி காணப்பட்டன. மகிந்தாவின் வெற்றியை உறுதி செய்திருந்த போதிலும் மிகவும் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அபிப்பிராய வாக்கெடுப்பிபின் முடிவுகள் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று தீர்மானிக்க முடியாவிட்டாலும் மகிந்தா, சரத்பொன்சேகா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டிருந்தனர். தனியார் ஊடகங்கள் எல்லாம் சரத்தின் வெற்றியை உறுதி செய்திருந்தன.அரசாங்கமும்; அச்சத்துடனேயே இந்த தேர்தலை அணுகியது. இந்த நிலையிலும் சரத் பொன்சேகாவின் தோல்விக்கு காரணம் என்ன?
எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் முன்வைத்த முக்கிய பிரச்சினைகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், மகிந்தாவின் குடும்ப ஆட்சியை ஒழித்தல், ஊழலற்ற ஆட்சி நிறுவுதல் என்பனவற்றுக்கான ஆட்சி மாற்றம். இவை தவிர சரத்தால் முன்வைக்கப்பட்ட ஏனைய விடையங்கள் எல்லாம் ஜனாதிபதி மகிந்தாவால் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளே.
சரத்பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களுள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பேன் என்று ஆரம்பத்தில் கூறியிருந்தார். இது சாத்தியமற்றது என்ற பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் தொடங்கியது. அதன் பின்னர் அவர் விடுத்த தேர்தல் அறிக்கையில் தான் ஜனாதிபதியானதும் ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கான அரசியல் யாப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் எனத் தெரிவித்திருந்தார். எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இவரால் இல்லாது ஒழிக்கமுடியாது என்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.
எதிர்கட்சியளர் முன்வைத்த குடும்ப ஆட்சி, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு ஒன்றும் புதியனவல்ல. அவை சாதாரண மக்களுக்கு பார்த்துப் பார்த்து பழகிப்போன ஒன்று. உழலை ஒழிப்பேன் என்று கூறிய சரத் பொன்சேகாமீதும் தேர்தல் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அரசாங்க கட்சிகளால் சுமத்தப்பட்டன.
கடந்த காலங்களில் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் மீதும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் பதவிக்கு வந்தவர்கள் தாங்கள் முன்வைத்த குற்றசாட்டை மறந்து விடுவதும் காலத்துக்கு காலம் நடைபெறும் நிகழ்ச்சியே. எனவே ஊழல் குற்றச்சாட்டுக்களும் மக்களுக்கு முக்கிய பிரச்சினையாகப் படவில்லை.
குடும்ப ஆட்சி என்பது இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தொடர்வதுதான். ஆரம்பத்தில் செனநாயக்கா குடும்ப ஆட்சி ஆரம்பித்தது. பின்னர் பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சி தொடர்ந்தது. இப்போது ராஜபக்ஷ குடும்ப ஆட்சி தொடர்கிறது. இதுவும் சாதாரண மக்களுக்கு பிரச்சினையாக தோன்றவில்லை.
ஆனால் சிங்கள மக்களுக்கு பிரச்சினையாகப் பட்டது புலிக்கட்சிகள்தான். அவர்கள் கடந்தகாலங்களில் புலிகளினால் பட்ட அனுபவங்களை மறக்கவில்லை என்பதை இந்த தேர்தலில் தெளிவாக தெரிவித்து விட்டனர்.
ஜனாதிபதி மகிந்தாவின் வெற்றிக்கான அறிகுறி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரிப்பதாக அறிவித்த உடனேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. அதை எதிர்கட்சிகள் கணக்கில் எடுக்கவில்லை. சிங்கள மக்களிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பிரதிநிதிகள் என்ற அபிப்பிராயம் மேலோங்கி இருக்கிறது. தாங்கள் புலிகளின் பிரதிகள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் நடந்துகொண்டனர். இவர்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தொடங்கியதும் சரத்துக்கு எதிரான அலை சிங்கள மக்கள் மத்தியில் உருவானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் கட்சி என்ற கருத்தை ஜே.வி.பி.யும் கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் உருவேற்றியிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் யுத்தம் முடிந்த பின்னராவது தாங்கள் புலிகளின் பிரதிநிதிகள் இல்லை, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாம் என்பதை சிங்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த முனையவில்லை என்பதை விட விரும்பவில்லை என்றுதான் சொல்லவேண்டும் . சரத்தை ஆதரிக்கும் ஏனைய கட்சிகளான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு தமிழ் வாக்குளை பொது தேர்தலில் பெறுவதற்காக தன்னை புலிகளின் நண்பனாக இனம்காட்டி வந்தவர். முஸ்லிம் காங்கிரஸ் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சி. இவைதான் சிங்கள மக்களுக்கு தெரிந்தது.
இந்த நிலையில் சரத் பொன்சேகாவுடன் புலிக்கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளதாக ஒரு அச்சம் சிங்கள மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது. அதற்கு அரசாங்க கட்சிகள் உருவேற்றின. அதன் பலனை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது வெற்றிக்கு நன்றி கூறுவதானால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே நன்றி கூறவேண்டும்.
இந்த தேர்தல் முடிவுகளால் சரத்தை ஆதரித்த கட்சிகளின் நிலை என்ன?
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்காவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்காமல் புலிகள் தடுத்துவிட்டனர். இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ 48,87,152 வாக்குகள் (50.29 வீதம்) பெற்று வெற்றியடைந்தார். ரணில் விக்கிரமசிங்கா 1லட்சத்து 80ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வடக்கில் உள்ள மக்கள் வாக்களித்திருந்தால் ரணில் வெற்றி பெற்றிருப்பார் என்ற கருத்து அப்போது நிலவியது. எனவேதான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களிடையே உள்ளது என்ற கருத்து நிலவி வந்தது.
புதிய வாக்காளர்கள் அதிகரித்த நிலையிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலை விட அவர்கள் ஆதரவு பெற்ற சரத் பொன்சேகா 18 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளால் தோல்வி யடைந்துள்ளமை பொதுத் தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பலத்த அடியாகவே உள்ளது. சரத் வெற்றி பெற்ற மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் நுவரேலியா மாவட்டமாகும். இவை பொது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்போவதில்லை.
ஜனாதிபதி மகிந்த ஜே.வி.;பி.யுடன் சேர்ந்து 2005 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குளை விட அதிகப்படியான வாக்குகளை தனித்து ஜே.வி. செல்வாக்கு பெற்றிருந்த தொகுதிகளில் பெற்றுள்ளமை ஜே.வி.பி.க்கும் பெருத்த அடியாகவே உள்ளது.
யாழ் குடா நாட்டைப் பொறுத்தவரை 80 வீத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர்களை வாக்களிப்பில் கலந்துகொள்ளும்படி தமிழ் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கும் மக்கள் செவிசாய்க்கவில்லை. இவர்கள் தொடர்ந்து தேர்தல்களை பகிஸ்கரிப்பதன் முலம் தெரிவிக்கும் செய்திதான் என்ன? தமிழ் மக்களுக்கு சரியான தலைமைகள் இல்லை என்பதா?
தமிழ் தலைவர்களும் சிந்திக்கவேண்டிய நேரம் இது.
29.01.2010
|