|
உதயன் சுடரொளி ஆகிய ஊடகங்கள் திட்டமிட்டு எம் மீது சுமத்துவது மிக மோசமான அவதூறு பிரச்சாரம்
- ஈ.பி.டி.பி.
உதயன் சுடரொளி ஆகிய ஊடகங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தி இருப்பது திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி மீது மிக மோசமான அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தை கண்டு அஞ்சும் சில சக்திகள் எதிர்வரும் தேர்தலிலும் ஈ.பி.டி.பி. பேராதரவு பெற்று வெற்றி பெறப் போகின்றது என்ற காழ்ப்புணர்ச்சியினால் சாவகச்சேரி மாணவன் கபில்நாத் அவர்களின் படுகொலை தொடர்பான தகவல்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் உதயன் சுடரொளி ஆகிய இரு பத்திரிகைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினருடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான திரு.சரவணபவான் அவர்களுக்குச் சொந்தமானவை ஆகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பரப்பப்பட்டு வரும் இது போன்ற மோசமான அவதூறு பிரச்சாரங்களினால் நடந்து முடிந்த படுகொலைக்கான சூத்திரதாரிகளை கண்டு பிடித்துவிட முடியாது. உண்மையான சூத்திரதாரிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான முறையில் அனைத்து அரசியல் தரப்பினரும் அரசியல் பேதங்களை மறந்து முன்வர வேண்டும். இதன் மூலமே இது போன்ற வன்முறை கலாசாரங்களை தடுத்து நிறுத்த முடியும்.
தேர்தல் காலத்தில் தவறான அவதூறு பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்புவது என்பது தேர்தல் வன்முறைகளில் ஓன்றாகவே நோக்கப்படும். இதனால் இது குறித்து தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்வதற்கும் மான நஷ்டம் கோரி குறித்த இரு பத்திரிகைகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
|