|
39 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்கள் அல்கொய்தா உதவியுடன் தான் நடத்தப்பட்டது
ரஷியா அறிவிப்பு
ரஷியாவில் மாஸ்கோ நகர சுரங்க ரெயில் நிலையங்களில் மனித வெடிகுண்டுகளாக வந்த 2 பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 39 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல்கள் அல்கொய்தா தீவிரவாதிகளின் உதவியுடன் தான் நடத்தப்பட்டது என்று ரஷியா அறிவித்து உள்ளது.
ரஷியாவில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுரங்க ரெயில்களில் குண்டுகள் வெடித்தன. லூபியாங்கா ரெயில் நிலையத்திலும், பார்க் கல்சுரி சுரங்க ரெயில் நிலையத்திலும் ரெயில்கள் நின்றபோது அந்த ரெயில்களில் குண்டுகள் வெடித்தன. 2 பெண் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து இந்த தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் 39 பேர் பலியானார்கள். 71 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு செசன்யா தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.
செசன்யா தீவிரவாதிகள் ரஷியாவில் உள்ள செசன்யா மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க கோரி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தாக்குதல்களை செசன்யா தீவிரவாதிகள் நடத்தி இருந்தபோதிலும், அல்கொய்தா உதவியுடன் தான் அது நடத்தப்பட்டு இருக்கிறது என்று தெரியவந்து உள்ளது. இதை ரஷிய வெளிநாட்டு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் இந்த தாக்குதல்களில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டபோது, நம்பவில்லை என்று சொல்லமுடியாது எனறு குறிப்பிட்ட அவர், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் அல்கொய்தா தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்த உதவி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அந்த பகுதியில் உள்ள பலர் ஆப்கானிஸ்தானில் மட்டும் தாக்குதல்கள் நடத்த சதி செய்யவில்லை. மற்ற நாடுகளிலும் தாக்குதல்கள் நடத்த அவர்கள் சதி செய்து வருகிறார்கள். அவர்களின் சதிச்செயல்களுக்கு காகசஸ் பகுதியும் தப்ப வில்லை என்று குறிப்பிட்டார்.
காகசஸ் என்பது ரஷியாவில் உள்ள ஒரு பகுதி ஆகும். இந்த பகுதியில் தான் செசன்யா, இங்குஷேட்டியா, தகெஸ்தான் ஆகிய பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த பகுதிகளில் முஸ்லிம் பெரும் அளவில் வசிக்கிறார்கள்.
இதற்கிடையில் ரஷிய அதிபர் மெட்வடேவ் தாக்குதல் நடந்த லூபியாங்கா ரெயில் நிலையத்துக்கு சென்றார். எஸ்கலேட்டரில் இறங்கி, பிளாட்பாரத்துக்கு சென்றார். எங்கு தற்கொலை தீவிரவாதி தாக்குதல் நடத்தி 24 பேர் உயிர் பலியாக காரணமாக இருந்தாரோ அந்த இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில், இந்த தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டுபிடித்து அவர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டுவோம் என்று உறுதி தெரிவித்தார்.
சைபீரியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த பிரதமர் புதின் அந்த பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு மாஸ்கோ திரும்பினார். அவர் இந்த தாக்குதல்களில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
|