|
ஒரு நேர உணவுக்குக் கூட கையேந்தும் அவலம்
-ஜே.ஜே.சதா-
"எங்களுக்கு சந்தோசமானதும், திருப்திகரமானதுமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க யார் உதவி செய்வார்கள்?" என்ற ஏக்கத்துடன் திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ள பெ.சண்முகநாதன் கூறுகின்றார்.
"அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் அதிலிருந்து எனது உயிரையும், எனது குடும்பத்தவர்களின் உயிரையும் பாதுகாத்து கொள்வதற்கு உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி முகாமில் வாழவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என்று கண்ணீருடன் தனது கையறு நிலையை விளக்குகிறார் அவர் .
யுத்தத்தினால் சம்பூர், மூதூர் ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில், தஞ்சமடைந்துள்ளவர்களை அண்மையில் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். அகதி முகாம்களிலுள்ள பலரும் கூறிய கருத்துக்கள் நெஞ்சை உருக்கியதுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியது.
இம்முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இவர்கள் கல்வி, கலாசாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும் பின்னடைவை எதிர்நோக்குகின்றனர். இம் மக்களுக்கு முழுமையாக எவ்வித வசதிகளும் கிடைக்காத நிலையில் முகாம்களில் அவல வாழ்க்கையையே வாழ வேண்டியவர்களாக இவர்கள் உள்ளனர்.
சண்முகநாதன் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திச் செல்கையில்; உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் எனது கிராமத்திலிருந்து பிறிதொரு கிராமத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குட்படுத்தப்பட்டேன்.
உடைமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் பக்கத்து கிராமத்திற்கு தஞ்சமடைந்த போதிலும் அங்கும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை இல்லாதிருந்தமை மிகவும் வேதனையளித்தது. இதனால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டுவெளியேறினேன்.
இதேவேளை அரசாங்கம் நாங்கள் முன்பிருந்த பிரதேசங்களில் எங்களை மீள்குடியேற்றுவதாக கூறி திருமலை மாவட்டத்திலுள்ள டவுன் - கிரேவெட்ஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள கோணேசபுரியிலுள்ள அகதிமுகாமிலே மீண்டும் தங்கவைக்கப்பட்டோம்.
ஆயிரக்கணக்கானோர் அம்முகாமில் தங்க வைக்கப்பட்டதுடன் சொல்ல முடியாதளவிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவல நிலையிலே எங்களது வாழ்நாளை கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இம்முகாமிற்கு ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களால் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. காலப்போக்கில் நீர் வழங்கல் இடைநிறுத்தப்பட்டமையினால் நீண்ட தூரத்திற்கு கால்நடையாக சென்று கிணற்றிலிருந்து குடிநீர் பெற்று வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
சொல்ல முடியாதளவிற்கு குடி நீர் பிரச்சினை தலைதூக்கியமையால் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் தங்களது அன்றாட கடமைகளை மேற்கொள்வதில் சொல்லொணா துயரங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
"எங்களது கிராமத்தில் வாழும்போது அயல் கிராமங்களுக்குச் சென்று ஒரு சில வேலைகளை செய்து வருமானத்தைப் பெற்றுக் கொண்டோம். ஆனால் தற்போது உண்ண உணவின்றி, ஒருவேளை சாப்பாட்டிற்குகூட விதியில்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று கண்ணீருடன் கூறுகிறார்.அதன் பின்னர் உலக உணவுத்திட்டமும், மாவட்ட செயலகமும் இணைந்து ஒவ்வொரு மாதமும் உணவுப் பொருட்கள் உட்பட பல நிவாரணங்களை அகதி முகாம்களுக்கு வழங்கி வந்த போதிலும் அவை திருப்தியளிக்கவில்லையெனலாம்.
ஆரம்பத்தில் பல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வருகைதந்து பல்வேறு உதவிகளை வழங்கிவந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களால் வழங்கப்ப்ட உதவிகளும் படிப்படியாக குறைந்தே சென்றது. "எங்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க யாருமுன் வருவார்" என்று பெருமூச்சு விடுகிறார்.
இதேவேளை `இம்முகாமில் உள்ள ஒரு சிலர் குடிநீர் மற்றும் ஏனைய பிரச்சினைகள் இல்லாத கிளிவெட்டியிலுள்ள பட்டித்திடல், அகதிமுகாம்களுக்கு செல்வதற்கு தீர்மானித்த போதிலும் அது கை கூடாமல் போனது என்றே கூறவேண்டும்.
"பட்டித்திடல் அகதி முகாமிற்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் நாங்கள் அங்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்தோம். ஆனாலும் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தால் நாங்கள் அங்கு செல்வதற்கு தயாராகவுள்ளோம்" என்று கண்ணீருடன் கூறினார்.
ஏக்கத்துடன், சண்முகநாதன் "எங்க ளது சொந்த இடமான சம்பூர் பிரதேசத்திற்கு செல்வதற்கு வழிபிறக்குமா? என்று கூறுவதை கேட்டபோது நெஞ்சுருகியது மட்டுமா? எங்களது கண்களிலும் கண்ணீர் பெருகியது என்று அங்கு சென்றிருந்தவர் தெரிவித்தார்.
இதேவேளை மூதூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதிமுகாமில் தஞ்சமடைந்துள்ள பாடசாலை மாணவியான செல்வி. ரி.திவ்யா என்பவருடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது,
நான் அதிமோதை பாடசாலையில் கல்வி கற்று வருகின்றேன். மூதூரிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது அகதிமுகாமில் தஞ்சமடைந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கல்வி கற்று வருகின்றேன். "ஏன் எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை?"
நான் பாடசாலைக்குச் செல்லும் போது பலமைல் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு நான் நடந்து செல்வதால் பாடசாலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. நான் பாடசாலைக்கு செல்லும் போதோ அல்லது வீடு திரும்பும் போதோ எனக்கு உதவியாக யாருமிலர் அதாவது தனியாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் நாங்கள் எங்களது மூதூர் பிரதேசத்தில் இருந்தபோது நிறைய நண்பர்களுடன் பாடசாலைக்கு சென்று வருவேன். ஆனால் அகதிமுகாமிற்கு வந்தவுடன் நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன். எனது எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது?
"நான் நன்றாக படிக்க வேண்டும் எனது குடும்பத்தவர்களை பார்க்க வேண்டும் என்று பல்வேறு எண்ணங்கள் தோன்றினாலும் அவையெல்லாம் யுத்தத்தினால் நீர்க்குமிழி போல ஆகிவிட்டது".
"நான் படிப்பதற்கு மிகவும் ஆர்வம் கொண்டிருந்தபோதும், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற அகதிமுகாம் வாழ்க்கையினால் எல்லாம் சீரழிந்து சின்னா பின்னமாக மாறிவிட்டது" என்று கதறி அழுகின்றாள் திவ்யா.
நான் நினைக்கவில்லை எனது பழைய நண்பர்களை சந்திப்பேன் என்று. எப்படியெல்லாம் இலட்சியத்துடன் வாழ்ந்துவந்த நான் இந்த கொடிய யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து தவிக்கின்றேன்.
இம்மாதிரியான மோசமானதும், பயங்கரமானதுமான நிலையில் இருந்து நான் கல்வியில் எவ்வாறு கவனம் செலுத்த முடியுமென்று திவ்யா கதறி அழுகின்றார். இவரது எதிர்காலம்?
--தினக்குரல்.
|