|
ஜே.வி.பிக்குள் மேலும் பல உடைவுகள் ஏற்படலாம்
- மணிண் (கொழும்பிலிருந்து)
ஜே.வி.பி என அழைக்கப்படுகின்ற ஜனதா விமுக்தி பெரமுன கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுதான் இப்பொழுது இலங்.கையில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக இருக்கின்றது. ஜே.வி.பியின் இருபகுதியினரும் பரஸ்பரம் வீசும் குற்றச்சாட்டுகள், வெறும்வாயை மென்ற ஊடகங்களுக்கு சுவையான அவல் கிடைத்தமாதிரி இருக்கின்றது. மறுபக்கத்தில் ஆட்கடத்தல்,வாகனக்கடத்தல், அடிதடி என ஜே.வி.பியினர் தமக்கேயுரிய பாணியில் தமது பிளவு நடவடிக்கையை அரங்கேற்றி வருகின்றனர். நேற்றுவரை மிகவும் கட்டுக்கோப்பான கட்சியாக தோற்றமளித்து வந்த ஜே.வி.பிக்குள் இப்படி ஒரு பிளவு நீறுபூத்த நெருப்பாக இருந்துள்ளதா என வியப்போர் ஒருபக்கம். இந்தப்பிளவு தனிப்பட்ட ஆளுமை முரண்பாடுகளால் எழுந்ததா அல்லது கொள்கை சம்பந்தப்பட்டதா மண்டையைக் குடைவோர் மறுபக்கம். எது எப்படி இருந்தாலும் ஜே.வி.பி போன்ற தீவிர சிங்கள தேசியவாத இயக்கம் உடைவதுதான் நல்லது என ஓரளவு நிதானப் போக்கு கொண்டவர்கள் கூட திருப்திப்பட்டுக் கொள்பவர்கள் இன்னொரு பக்கம். இலங்கை அரசியலில் கட்சிகள் பிளவுபடுவது அல்லது உடைவது என்பதுஒன்றும் புதுமையான விடயமல்ல.
1935ல் தொடங்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தான் 1943ல் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். பின்னர் இக்கட்சிகள் இரண்டும் காலத்துக்காலம் பல பிளவுகளைக் கண்டுவந்துள்ளன. சுதந்திர இலங்கையின் முதலாவது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றுதான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951ல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவினார். தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் குழுவினர் 1949ல் தமிழரசுக் கட்சியியை நிறுவினர். 1970ம் ஆண்டுத் தேர்தலின் பின்னர் தமிழ்க்காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஆ.தியாகராசா, சி.அருளம்பலம் ஆகியோர் முற்போக்கு தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினர். அதேபோல தமிழரசுக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழீழ விடுதலை அணி என்பனவற்றை உருவாக்கினார்கள். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் இயக்கங்களைப் பொறுத்தவரையில் கூட PLOTE, TELO, EPRLF, EROS, TELA, EPDP, NLFT எல்லாமே பிளவைச் சந்தித்து வந்துள்ளன. உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான பயங்கரவாத இயக்கம் என கருதப்பட்ட புலிகள் இயக்கத்திலேயே அதன் கிழக்கு தளபதி கருணா தலைமையில் பெரும்பிளவு ஏற்பட்டது. புலிகளின் வடக்கு தலைமைக்குள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கும் முரண்பாடு இராணுவம் வன்னியைக் கைப்பற்றும் சூழலில் எரிமலையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக அண்மைக்காலத்தில் கூட நாட்டின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஜக்கிய தேசியக்கட்சி எனபனவற்றில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. கரு ஜெயசூரியா தலைமையிலான 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜ.தே.கவிலிருந்து வெளியேறி சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசில் இணைந்தனர். மறுபக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்களசமரவீர சிறீபதி சூரியாராய்ச்சி போன்றோர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி ஜ.தே.கவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். ஜே.வி.பியைப் பொறுத்தவரையிலும் கூட அதன் ஸ்தாபக தலைவர் ரோகண விஜேவீர சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து வந்தே தனது கட்சியை உருவாக்கினார். 1971ல் அவர்களது முதலாவது ஆயுதக்கிளர்ச்சி தோல்வியடைந்த பின்னர், ஜி.ஜ.டி.தர்மசேகர தலைமையில் ஒரு குழுவினர் ஜே.வி.பியை விட்டு விலகிச் சென்று தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இயங்கினர். அதேபோல பற்றிக் பெர்னாண்டோ தலைமையில் ஒரு குழுவினர் வெளியேறி ஜனதா சங்கமய என்ற பெயரில் செயற்பட்டனர். பின்னர் அவர்களும் பிளவுபட்டனர். வசந்தா தஸநாயக்க தலைமையில் வெனச என்ற குழு உருவானது. எனவே ஜே.வி.பியைப் பொறுத்தவரையில் பிளவு என்பது புதுமையானது அல்ல. ஜே.வி.பியின் தற்போதைய தலைமை பின்பற்றி வரும் அதிதீவிரமான சிங்கள தேசியவாதப் போக்கு காரணமாக அக்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றும் என்பது அரசியல் ஞானம் உள்ளவர்கள் எதிர்பார்த்த விடயம்தான். ஏனெனில் ஜே.வி.பி. தன்னை ஒரு மார்க்சிசக் கட்சியென்று சொல்லிக் கொண்டு நாட்டின் மிக முக்கியமான கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினையான தேசிய இனப்பரச்சினையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கெதிராக நிலைப்பாடு எடுத்து வந்துள்ளது. அதன் சிங்கள இனவாதப் போக்கும் அரசியல் சந்தர்ப்பவாதமும் எவ்வளவு தூரத்துக்கு உள்ளது என்றால், சந்திரிகா அரசு 2000ம் ஆண்டில இனப்பிரச்சினைக்கு தீர்வு முன் வைத்த போது அது இலங்கை மக்கள் அனைவரினதும் பொது விரோதியான ஜ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்து அதை மூர்க்கமாக எதிர்த்தது. இன்றுகூட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு ஏதாவது தீர்வை முன்வைத்தால் தேசபக்த சக்திகளுடன் சேர்ந்து இந்த அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஜே.வி.பி. அடிக்கடி கூறி வருகின்றது. ஜே.வி.பியின் இந்த மிரட்டலின் அர்த்தம் மக்களை வீதிக்குக் கொண்டுவந்து வெகுஜனக்கிளர்ச்சி மூலம் அரசாங்கத்தைச் செயலிழக்க வைப்பதோ அல்லது ஆயுதக்கிளர்ச்சி யொன்றின் மூலம் அரசாங்கத்தை விரட்டுவதோ அல்ல.
மாறாக, இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி. வேறொரு திட்டத்தையே வைத்துள்ளது. முழுக்க முழுக்க இன்று பாராளுமன்றவாதக் கட்சியாக செயற்படும் ஜே.வி.பி., இன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதாவது படுபிற்போக்கான ஜ.தே.கவுடனும் புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்ஒன்றைக் கொண்டுவருவதாகும். எனவே அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்;கு ஜே.வி.பி கூட்டுச் சேரப்போவதாக சொல்லும் தேசபக்த சக்திகள் என்பது ஜ.தே.கவும் புலிப்பினாமிகளுமே என்பதில் சந்தேகம் இல்லை. இனப்பிரச்சினை தீர்வுவிடயத்தில் மட்டுமின்றி வேறு பல விடயங்களில் கூடஅணமைக்காலத்தில் ஜே.வி.பி அரசுக்கெதிரான தீவிரமான நிலைப்பாட்டையே எடுத்துவருகின்றது. அத்துடன் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் அது அண்மையில் புதுப்பித்துள்ளது. இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. ஜே.வி.பியின் இந்த செயற்பாடுகளுக்கும் ஜ.தே.கவுடனான இரகசிய உறவுக்கும் நேரடித்தொடர்பு உண்டு. கடந்த வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்பாக ஜ.தே.கவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகளின்போது அரசைக்கவிழ்க்க ஜே.வி.பி ஒத்துழைத்தால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுவது குறித்த பேரப்பேச்சுகளும் நடைபெற்றன. அந்த நம்பிக்கையிலேயே வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு நிச்சயம் அரசு கவிழும் என்ற கருத்தை சில ஜ.தே.க தலைவர்கள் உறுதியாகவும் பகிரங்கமாகவும் வெளியிட்டனர். ஆனால் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் அரசுக்கெதிராக வாக்களிக்கக் கூடாது என உறுதியாக நின்றதினால் அது நடைபெறவில்லை.
பொதுவாக விமல் வீரவன்சவும் அவரது ஆதரவாளாகளும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு கட்சிக்கு உள்ளேயே இருந்து வந்தது. அதே வேளையில் கட்சித்தலைவர் சோமவன்ச அமரசிங்க ஜ.தே.கவுக்கு ஆதரவாக செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு வந்துள்ளது. எந்தவொரு காரணமுமில்லாமல் சோமவன்ச அமரசிங்க மீதான இந்தக் குற்றச்சாட்டு எழவில்லை. 1988-89ல் நடைபெற்ற ஜே.வி.பியின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது ஆர்.பிரேமதாச அரசால் ரோகண விஜேவீர உட்பட ஜே.வி.பி தலைமையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களும் அழிக்கப்பட்டனர். அப்போதைய மத்திய குழுஉறுப்பினர்களில் உயிர் தப்பியவர் சோமவன்ச மட்டுமே. பிரேமதாச அரசில் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்த சிறிசேன கூரே சோமவன்சவின் நெருங்கிய உறவினராக இருந்த காரணத்தினால் சோமவன்ச அன்று உயிர் தப்பினார். சோமவன்சாவை பாதுகாப்பாக சிறிசேன கூரே இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டார். இந்தியாவிலிருந்தே சோமவன்ச இலண்டனுக்கு சென்று குடியேறினார். ஜ.தே.கவுடனான இரகசியத் தொடர்பு சோமவன்சவுக்கு இப்பொழுதும் உண்டு என பல ஜே.வி.பி உயர்மட்ட உறுப்பினர்கள் நம்புகின்றனர். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென சோமவன்ச இலங்கை அரசிடம் கோரியதும், அதற்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு தெரிவித்ததும் அனைவரும் அறிந்த விடயம். இதில் கூட சோமவன்ச ஜ.தே.கவின் நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் புலிகளின் பினாமி அமைப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாவிட்டாலும் பிள்ளையான் குழு வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில் அங்கு போட்டியிடும் ஜ.தே.க - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெற வைப்பதில் புலிகள் மும்முரமாக உள்ளனர். அக்கூட்டணியை ஆதரிப்பதற்கு நிபந்தனையாக பிள்ளையானிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வைக்க வேண்டுமென புலிகள் நிபந்தனை விதித்துள்ளனர். எனவேதான் பிள்ளையானிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டுமென ஜ.தே.க கோரி வருகின்றது. இப்பொழுது சோமவன்சவும் அதே ராகத்தை திடீரென்று பாட ஆரம்பித்துள்ளார். இவ்வளவு காலமும் புலிகளை தீவிரமாக எதிர்த்து பேசி வந்த ஜே.வி.பி தலைமை இப்பொழுது புலிகளின் வேலைத் திட்டத்தில் இணைந்து வேலை செய்வது வெறும் தற்செயலான நிகழ்ச்சியல்ல. அதுமட்டுமல்ல ஜ.தே.கவும் மங்கள சமரவீரவும் அமைத்துள்ள தேசியசபையில் ஜே.வி.பியையும் இணைப்பதற்கு பேச்சுவார்த்;தை நடந்து வருகின்றது.இது சம்பந்தமாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்காவுடன் மங்கள பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். அவர் நடத்தியுள்ள பேச்சுவார்த்தையை இன்னொரு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான லால்காந்த நியாயப்படுத்தியுள்ளார். ஜே.வி.பிக்குள் சிறீ.ல.சு.க – ஜ.தே.க ஆதரவு நிலைப்பாடுகள் இருக்கின்றபோதிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் ஒரே விதமான நிலைப்பாட்டையே – அதாவது அதிகாரப்பகிர்வு மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டைப் பிரிக்கும் செயல் என்பதே தலைமையிலுள்ள இருசாராரினதும் நிலைப்பாடாகும்;. சோமவன்ச அமரசிங்கவின் தீவிரதமிழர் - விரோத, இந்திய - விரோத சிறீ.ல.சு.க - விரோத நிலைப்பாட்டுடன் ஒப்பிடுகையில், விமல் வீரவன்ச குழுவினரின் நிலைப்பாடு சற்று வித்தியாசமானதுதான். ஆனால் தமிழர் பிரச்சினையில் விமல் வீரவன்ச குழுவினர் ஒரு சரியான நிலைப்பாடு எடுப்பார்களாஎன்பது கேள்விக்குறியே. அவ்வாறு ஒரு சரியான நிலைப்பாடு எடுக்காதுவிடின் விமல் வீரவன்ச குழுவினரின் எதிர்காலம் நல்லமுறையில் அமையப் போவதில்லை.
எது எப்படியிருப்பினும் தேசிய இனப்பிரச்சினையில் ஒரு மோசமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவந்த ஜே.வி.பியின் ஒருமுகப்படுத்தப்பட்ட பலம் உடைவுபட்டது, இலங்கையின் தேசிய அரசியலைப் பொறுத்தவரை நன்மை பயக்கும் விடயமாகும். ஜே.வி.பி தேசிய இனப்பிரச்சினையில் ஒரு சரியான நிலைப்பாடு எடுக்காதவரை அது மேலும் பல உடைவுகளை எதிர்நோக்கும் வாய்ப்புண்டு. ஏனெனில் அதன் தமிழர் - விரோத நிலைப்பாட்டிலிருந்தே, அதன் இந்திய – விரோத ஜ.தே.க சார்பு நிலைப்பாடு உருவாகின்றது. எதிர்காலத்தில் ஜே.வி.பியின் இந்த நிலைப்பாடு காரணமாக அதன் தலைமைக்கும் கீழ்மட்டங்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் பெரும்பாலான உறுப்பினர்களும் தலைமை குழு அங்கத்தினர்களும் கிராமப்புற சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வர்க்க உணர்வால் ஜே.வி.பியில் இணைந்தவர்களேயொழிய இனவாத அரசியலால் கவரப்பட்டு வந்தவர்களல்ல. இலங்கையின் அதிகாரத்துவமும் ஊழலும் நிறைந்த அரசை நீக்கி எல்லா மக்களையும் சமமாக நடத்துகின்ற ஜனநாயக வழியில் ஆட்சி செய்கின்ற ஒரு ஆட்சி முறையை ஜே.வி.பி கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் அதனுடன் இணைந்தனர். ஜே.வி.பி தலைமை அவர்களது நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தால் அவர்கள் நிச்சயம் நம்பிக்கை இழப்பர். அதன் ஆரம்பமே இப்போதைய பிளவு. இலங்கை அரசியலில் இனவாதத்தை முன்வைத்து அரசியல் நடாத்தியகட்சிகளையும் தனி நபர்களையும் சிங்கள மக்கள் காலத்துக்கு காலம் நிராகரித்தே வந்துள்ளனர் என்ற உண்மையை ஜே.வி.பியின் இரு பிரிவினரும் கவனத்தில் கொள்ளாதுவிடின் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கப் போவதில்லை.
|