|
யாழ்ப்பாணம் – வவுனியா நகர மக்கள், தமிழர் வாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனைக்கு கால்கோள் இடவேண்டும்!
சண்முகம் சுப்பிரமணியம்
யாழ்ப்பாண மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்குமான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இப்பொழுது அதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு காலமும் ஒட்டுமொத்த தமிழ் பிரதேசங்களும் ஆயுதக்கலாச்சாரத்தில் மூழ்கி, இத்தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளும் முன்னாள் ஆயுதக்குழுக்களாக இருந்தன. எனினும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பெரும் வன்முறைகள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது, மனிதர்கள் இயல்பில் சமாதானச் சூழலை நேசிப்பவர்கள் என்ற அடிப்படை உண்மையை பறைசாற்றி நிற்கின்றது. சூழல்கள் சரியாக உருவாக்கப்பட்டால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதான சகஜீவனத்துடனும், ஒருவர் மற்றவரை அடக்காமலும், சுரண்டிக் கொழுக்காமலும் வாழமுடியும் என்பதை இந்த ஒரு சிறிய சூழல் எடுத்தியம்பி நிற்கின்றது. இலங்கையின் வரலாற்றில் எத்தனையோ தேர்தல்கள் நடந்திருந்த போதிலும், தற்போது நடைபெறவுள்ள தேர்தல்கள் உள்ளுராட்சித் தேர்தல்களாக இருப்பினும், இத்தேர்தலுக்கு ஒரு விசேட முக்கியத்துவம் உண்டு. முதலாவது முக்கியத்துவம், கடந்த 25வருட காலமாக தமிழர்களின் தலைவிதியை தீர்மானித்து வந்த புலிகள் இயக்கம், முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட ஒரு சூழலில் இந்த தேர்தல்கள் நடைபெறுகின்றன. வழமையாக புலிகளால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சமற்ற ஒரு சூழலில் இத்தேர்தல் நடைபெறுவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் முன்வந்து போட்டியிடுவதுடன், மக்களும் பயமின்றி வாக்களிக்கும் நிலைமை தோன்றியுள்ளது. முக்கியமாக யுத்தத்துக்கு பிந்திய, புலிகள் இல்லாத, வெளி அழுத்தங்கள் இல்லாத ஒரு சூழலில் மக்களின் மனநிலை அல்லது தீர்ப்பு என்னவாக இருக்கப்போகின்றது என்பதை இத்தேர்தல் எடுத்துக்காட்டப்போகின்றது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உறுதியுடன் தொடர்ந்து நடாத்தி, புலிகளை வெற்றிகரமாக தோற்கடித்த அரசாங்க கட்சி (பொதுசன ஐக்கிய முன்னணி) இத்தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுகின்றது. அதுமட்டுமின்றி இதுவரைகாலமும் தமிழ்பகுதிகளில் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற, பிரதான தமிழ் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியும் அரசாங்க கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது இன்னொரு விசேட அம்சமாகும். மறுபக்கத்தில், இதுவரை காலமும் புலிகளின் பாராளுமன்ற பினாமியாகச் செயல்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பும், இத்தேர்தலில் மக்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டாலும், துணிந்து முன்வந்து (இது ஜனநாயகச் சூழலின் சிறப்பம்சமாகும்) போட்டியிடுகின்றது. 1977ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு பல கொடுமைகளைச் செய்து, இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றிய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் இத்தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறது. புலிகளுக்கு எதிராக நின்ற அதேவேளையில், அரசாங்கத்துடனும் சேராமல் தனித்துவம் பேசிய, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான பாரம்பரிய தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியும் இத்தேர்தலில் களம் இறங்கியுள்ளது. இப்படியாக யாழ்ப்பாணம் – வவுனியா நகர மக்களுக்கு முன்னால் பல்வேறு கருத்துக்களை உடைய அரசியல் கட்சிகள் தமக்கு ஆதரவளிக்கும்படி வேண்டி இத்தேர்தலில் நிற்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இந்த இரு பிரதான தமிழர் நகரங்களினதும் வாக்காளப் பெருமக்கள் என்ன பதிலை வழங்கப்போகிறார்கள் என்பதை, இலங்கை மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தின் மக்களும், உலக மக்களும் கூட எதிர்பார்த்து நிற்கின்றனர். முக்கியமாக ஒரு நீண்டயுத்தம் காரணமாக, சிதறிச் சின்னாபின்னமாகி, உலகின் கேவலமான மனிதக்கூட்டங்களில் ஒன்றாக மாறி நிற்கும் ஈழத்தமிழினத்தின் எதிர்காலப்பாதை என்ன என்பதை, இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்புகளிடமும் காணப்படுகின்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து – அதாவது 1948 முதல் –இன்றுவரை அனைத்து தமிழர் தலைமைகளும் தொடர்ச்சியாக, இலங்கையின் தேசிய சுதந்திரம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றுக்கு எதிரான ஒரு ‘எதிர்ப்பு அரசியலையே’ நடாத்தி வந்துள்ளனர். அவர்களது எதிர்ப்பு அரசியலுக்கு சில வேளைகளில் சில நியாயப்பாடுகள் இருந்தாலும், தமிழ் தலைமைகள் வர்க்கரீதியாக முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிரதிநிதிகளாகவும், ஏகாதிபத்தியதாசர்களாகவும், உள்நாட்டில் பிற்போக்கான ஐ.தே.கவின் நண்பர்களாகவும் இருந்த காரணத்தாலும், ராஜதந்திரமோ விட்டுக்கொடுப்புகளோ இல்லாத அரசியல் - ஆயுதப்போராட்டங்களை நடாத்தியதாலும், இன்று தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழ்மக்கள் இன்று இருக்கும் அவலநிலையில், பல அழிவுகளைச் செய்துவிட்ட இந்த எதிர்ப்பு அரசியலை, அவர்கள் தொடர விரும்புகிறார்களா என்பதை, இத்தேர்தலில் அவர்கள் ஒரு குறியீடாக வெளிப்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். பிரதான தமிழ் அரசியல் தலைமைகளின் எதிர்ப்பு அரசியலுக்கு விதிவிலக்காக, தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்தவர்களும் இல்லாமல் இல்லை. அவர்களில் முதன்மையானவர்கள் இடதுசாரிகள். ஆனால் கடந்தகாலத்தில் அவர்களும் விட்ட சில பாரிய தவறுகளால் ஆட்சியதிகாரத்துக்கு வரக்கூடியவர்களாக இல்லாமல் போனதுடன், தமிழ் மக்களும் அவர்களுக்கு போதிய ஆதரவை வழங்கவில்லை. இவர்கள் தவிர, இலங்கையின் பிரதான அரசியல் (ஆளும்) கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி என்பனவற்றுடனும் இணைந்து சில தமிழ் அரசியல் சக்திகள் வேலைசெய்து வந்துள்ளன. அப்படியானவர்களை பிரதான தமிழ் தலைமைகள் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தியதுடன், பிற்காலத்தில் புலிகள் அவர்களில் பலரை சுட்டுப்படுகொலை செய்தும் விட்டனர். அவர்களில் நன்கு அறியப்பட்டவரும், மக்கள் செல்வாக்கு பெற்ற ஒருவராகவும் இருந்தவர் யாழ் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பா ஆகும். அல்பிரட் துரையப்பா அவர்கள் ஒரு பெரும் அரசியல்வாதி அல்ல. அவரிடம் தூரதிருஷ்டமிக்க பெரும் திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் நடைமுறைசார்ந்த ஒரு செயற்பாட்டு உள்ளுர் அரசியல்வாதியாக அவர் இருந்தார். அவர் யாழ் நகர மக்களின் தேவைகளை நன்கு விளங்கிக்கொண்டு செயல்பட்டதால், மக்களின் ஆதரவு அவருக்கு அபரிமிதமாக இருந்தது. மக்களின் ஆதரவு அவருக்கு எவ்வளவு தூரம் இருந்தது என்றால், 1960ம் ஆண்டு இரண்டு தடவைகள் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், யாழ்பாணத்தொகுதியில் அவர் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையும், தமிழரசுக்கட்சி வேட்பாளர் எஸ்.கதிரவேலுப்பிள்ளையும் இரண்டு தடவைகளிலும் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதிலிருந்து புரிந்து கொள்ளமுடியும். 1970 ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில், யாழ்பாணத்தொகுதியில் மீண்டும் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அல்பிரட் துரையப்பா 56 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் சி.எக்ஸ்.மார்ட்டினிடம் தோல்வியடைந்தார். யாழ் நகரை குறைந்தளவு வளங்களை வைத்துக்கொண்டே, நவீன நகராக கட்டியெழுப்பிய பெருமை அல்பிரட் துரையப்பாவையே சேரும். பிற்காலத்தில் அவர் மக்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்வதற்காக, அன்றைய சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட முன்வந்தார். அதனால் யாழ் நகர மக்கள் மேலும் பல நன்மைகளைப் பெற்றதை அனைவரும் நன்கறிவர். இதனால் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை அரசியல்ரீதியாக உடைக்கமுடியாத அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமை, 1975ம் ஆண்டு கோழைத்தனமான முறையில், பிற்காலத்தில் புலிகளின் தலைவராக முடிசூடிய பிரபாகரன் உட்பட சில ‘பொடியன்களை’ அனுப்பி, துரையப்பா பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சமயம் சுட்டுப்படுகொலை செய்வித்தது. அல்பிரட் துரையப்பாவின் படுகொலையுடன் ஆரம்பித்த தமிழர்களின் கொலைக்கலாச்சார அரசியல், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக மாறி, தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களையும், பின்னர் அனைத்து தமிழ் ஜனநாயக - இடதுசாரி சக்திகளையும் அழித்து, இன்று தன்னைத்தானே அழித்துக்கொண்டு முடிவுக்கு வந்துள்ளது. இன்று தமிழினம் மீண்டும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் வந்து நிற்கின்றது. இப்படியான ஒரு சூழ்நிலையில,; மீண்டும் பழைய தமிழ் தலைமைகளின் புளித்துப்போன, கடைகோடிப்பிற்போக்கான, தமிழினத்துக்கு எந்தவொரு நன்மையையும் செய்யாத ‘எதிர்ப்பு அரசியல்’ பாதையில் பயணிப்பதா அல்லது தமிழ் மக்களின் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளையில், தேவையான இடங்களில் அரசாங்கத்தடன் ஒத்துழைத்து தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வழியில் பயணிப்பதா என்பதை, இந்த தேர்தல்களில் யாழ் மற்றும் வவுனியா நகர தமிழ் வாக்காளர்கள் கோடிகாட்டுவது அவசியம். தமிழ்மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் நிலவிய இந்த இரண்டுவிதமான அரசியல்பாதைகளினதும் சரி - பிழையை அறிந்து கொள்வதற்கு, எத்தனையோ உதாரணங்கள் மக்கள் முன் விரிந்து கிடக்கின்றன. குறிப்பாக யாழ் மாநகரசபையின் வாக்காளர்கள், 1975ல் அல்பிரட் துரையப்பாவின் கொலையுடன் ஆரம்பமான எதிர்ப்புரட்சி தமிழ் அரசியலுக்கு முடிவுகட்டி, முற்போக்கான தேசிய அரசியல்பாதையில் பயணிப்பதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலம், தமிழ்மக்களை தனிமைச் சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் புதியபாதையைத் திறந்துவைக்க வேண்டும். நல்லது நடப்பதை எதிர்பார்ப்போமாக!
|
|